Wednesday 2 April 2014

மா சாகுபடி ... கன்றில் கவனம் வைத்தால், கடைசி வரை லாபம்தான்!




மா சாகுபடிக்கு மணல் கலந்த செம்மண் ஏற்றது. புதிதாக மா கன்றுகளை நடவு செய்யும் போது ரகங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். நல்ல விலை கிடைக்கும் என்று ஏதாவது ஒரு வெளி மாநில ரகத்தை வாங்கி விடக் கூடாது. நமது பகுதியில் நல்ல விலை கிடைக்கும் ரகங்கள், அதே சமயத்தில் அதிக விளைச்சல் கொடுக்கும் ரகங்கள் என்று தேர்வு செய்து நடவேண்டும்.

அப்படியே நடக்கூடாது !
தரமான நர்கரிகளில் கன்றுகளை வாங்க வேண்டும். வாங்கி வந்த கன்றுகளை உடனே நடவு செய்து விடாமல்.. நடவு செய்ய உள்ள நிலத்தின் மேல் மண்ணை, கன்று இருக்கும் பையில் இட்டு, தோட்டத்தில் வழக்கமாக பாசனத்திற்குப் பயன்படுத்தும் அதே நீரைத் தெளித்து நிழலில் வைத்திருந்து, புதிய தளிர்கள் வரும் வரை காத்திருந்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், கன்றுகளின் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும்.
கன்றுகளுக்கு இடையே 30 அடி இடைவெளி கொடுக்கலாம். அடர் நடவு முறையில் 15 அடி இடைவெளியிலும் தற்போது நடுகிறார்கள். மண்ணின் வளம், நீர் வசதி, நடவு செய்யும் ரகத்தின் வளர்ச்சி விகிதம் ஆகியவையின் அடிப்படையில்தான் இடைவெளியைத் தீர்மானிக்க வேண்டும். ரகம், இடைவெளி ஆகியவற்றைத் தீர்மானித்த பிறகு 2 கன அடியில் குழிகளை எடுத்து ஆறப்போட வேண்டும். தலா 20 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ – பாக்டீரியா, 3 கிலோ தொழுவுரம், 1 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றுடன் கொஞ்சம் மேல் மண்ணைக் கலந்து ஒவ்வொரு குழியிலும் இட்டு கன்றை நடவு செய்ய வேண்டும்.

தண்ணீர் தேங்கக் கூடாது !
கன்றுகளை நடவு செய்யும் போது அடிப்குதிக்கு அருகே பக்கவாட்டில் கிளைகள் இருந்தால், அதை வெட்டி விட வேண்டும். வெட்டிய இடத்தில்  காப்பர் ஆக்சிக் – குளோரைடு பசையைத் தடவிவிட வேண்டும். நம் உடலில் ஏற்படும் காயங்களுக்கு மருந்து போடுவதைப் போலத்தான் இதுவும். பாசனத்தைப் பொருத்தவரை சொட்டுநீர்ப் பாசனம்தான் சிறந்தது. குழிகளில் ஈரம் காயாதவாறு பாசனம் செய்தாலே போதும். அதே நேரத்தில் கன்றின் மையத் தண்டுப்பகுதியைச் சுற்றி தண்ணீரைத் தேங்க விடக்கூடாது. இதைச் சரியாகச் செய்தாலே, பாதி நோய்களைத் தடுத்து விடலாம். நடவு செய்த ஆறாவது மாதம், தளிர்களில் பூச்சித் தாக்குதல் இல்லாமல் இருப்பதற்காக, ஏதேனும் ஒரு வளர்ச்சி ஊக்கியுடன் கூடிய பூச்சிக்கொல்லி அல்லது பூச்சிவிரட்டியைத் தெளிக்க வேண்டும். இரண்டாம் ஆண்டில், ரசாயனம் அல்லது இயற்கை என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மழைக் காலத்திற்கு முன்பாக உரத்தைக் கொடுக்க வேண்டும்.

மரத்தின் வளர்ச்சி, மண்ணின் தன்மை, பாசன வசதி ஆகியவை நன்றாக இருந்தால்,.. மூன்றாம் ஆண்டிலேயே மரங்கள் பூக்கத் தொடங்கி விடும். அப்போது மரத்தின் வளர்ச்சியைப் பொருத்து.. அதன் தாங்கும் திறனின் அடிப்படையில் துவையான அளவிற்கு மட்டும் பூக்களை அனுமதிக்க வேண்டும். அதிகப்படியாக உள்ள பூக்களை உருவி விடுவது நல்லது. அடுத்து வரும் ஆண்டுகளிலும் இதே முறையைக் கடைபிடிக்க வேண்டும். அந்த நேரத்தில் மண்ணின்  வளத்திற்கு ஏற்ப  பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை சிபாரிசு செய்யப்பட்ட அளவிற்கு கொடுக்க வேண்டும். மண் பரிசோதனை மூலம், நமது மண்ணில் என்னென்ன சத்துக்கள் அதிகமாக உள்ளன, எது குறைவாக உள்ளது? எனத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப, சத்துக்களைக் கொடுக்க வெண்டும். இரண்டு இட்லி சாப்பிடும் நபருக்கு 10 இட்லியும், 10 இட்லி சாப்பிடும் நபருக்கு இரண்டு இட்லியும் கொடுப்பது போன்றதுதான் மண்ணிலுள்ள சத்துக்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் உரமிடுவதும்.

காய்க்க ஆரம்பித்த பிறகு, காயோட வளர்ச்சிக்காக ஒரு முறை இயற்கை வளர்ச்சி ஊக்கி தெளிக்கணும். நன்றாக  விளைந்த காய்களை 80 சதவிகிதம் முத்தின நிலையில் அறுவடை செய்யணும். சிலர் 50% முத்தினதும் பறித்துவிடுவாங்க. இது தப்பான விஷயம். காய்களை அடிபடாமல் பறிக்கணும் என்பதும் முக்கியம். அப்போதுதான் அது நல்லபடியாக பழுத்து வரும். அதே போல் பேக்கிங் விஷயத்திலும் கவனமாக இருக்கணும். இப்ப எல்லாம் பேக்கிங் செய்வதற்கு நிறைய வசதிகள் வந்துவிட்டது. அதைப் பயன்படுத்தி காய்களை அடைத்து விற்பனைக்கு அனுப்பினால் கூடுதல் லாபம் கிடைப்பதற்கு நல்ல வாய்ப்பிருக்கிறது என்றார் செளந்திரராஜன்.

பெங்களூராவைக் காயாகவே விற்கலாம் !
பெங்களளூரா விவசாயிகள் கவனத்திற்காக செளந்திரராஜன் சொன்ன சந்தைத் தகவல் : பெங்களூரா ரகத்தின் விலை, பழக்கூழ் தொழிற்சாலைகளின் தேவையின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு பழக்கூழ் நிறுவனங்கள் உற்பத்தி செய்த கூழ், இன்னும் இருப்பில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பெங்களூரா ரகம் அதிகளவில் விளைந்துள்ளது. இதனால் விலை குறையும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் நல்ல விளைச்சல் இருந்தாலும், விலை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள், பெங்களூரா ரகத்தைப் பயிரிட்ட விவசாயிகள். இதைச் சமாளிக்க, கறிக்கான காயாக விற்பதுதான் நல்ல வழி. டிசம்பர் மாத இறுதியில், கிறஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக ஒட்டன்சந்திரம் சந்தையில் இருந்து, டன் கணக்கில் கறி மாங்காய்கள், கேரளாவிற்கு அனுப்பப்படுகின்றன. அப்போது கிலோ 25 ரூபாய் வரைகூட விலை கிடைக்கும். இந்தச் சந்தைத் தேவையை மனதில் வைத்து, காய்களாகவே அறுவடை செய்து லாபம் பார்க்கலாம். இதற்கு வசதியாக இந்த ரகக் காய்களை ( கார் காய்)  டிசம்பர் மாதங்களில் அறுவடை செய்து விற்கலாம். இந்த சீஸனில் காய்த்துக் குலுங்கச் செய்வதற்கும் தொழில்நுட்பங்கள் கைவசம் உள்ளன.

தொடர்புக்கு
செளந்திரராஜன், செல்போன் :98421 – 28882
தேவநாதன் , செல்போன் : 94422 -17079

No comments:

Post a Comment