Friday 7 February 2014

ஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம்… ரெட்லேடி பப்பாளி

கரும்பு, மஞ்சள், வாழை… என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை கிடைக்காமல், அவதிப்படுவதை விடுத்து… சத்தான சந்தை வாய்ப்புள்ள புதிய பயிர்களைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பது, தொடர்கிறது. அந்த வகையில், பப்பாளி சாகுபடியில் இறங்கி, லட்சங்களில் வருமனாத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், கோயம்புத்தூர், ‘சின்னக்குயிலி’ கிரமத்தைச் சோந்த முன்னோடி விவசாயி, பாலதண்டாயுதபாணி.
தினமும் வருமானம்!
எனக்கு 15 ஏக்கர் நிலமிருக்கு. ஆயிரம் அடிக்கு பேர்வெல் போட்டு தண்ணீர் எடுத்துத்தான் பாசனம் செய்கிறேன். விவசாயம் கட்டுபடியாகுறதில்லை என்பது உண்மைதான். ஆனால், கொஞ்சம் மாற்றி யோசித்து செய்தால், கண்டிப்பாக நல்ல லாபம் பார்க்க முடியும். இந்தப் பக்கம் எல்லாரும் ராகி, சோளம் ,கம்பு என்று விளைவிக்கும் போது.. நான் பருத்தியை விதைத்தேன். அதன் பிறகு, எல்லாரும் பருத்திக்கு மாறினாங்க. அது கொஞ்சம் சுணங்கிய நேரத்தில் திராட்சை சாகுபடியில் இறங்கினேன். அதன்பிறகு அதே பந்தலில், பாகல், புடலை, பீர்கன் என்று சாகுபடி செய்தேன். அடுத்து வாழை விவசாயத்திற்கு மாறினேன். ஒப்பந்த அடிப்படையில் பால் பப்பாளி சாகுபடி செய்தேன்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இப்போது மூன்று வருடமாக பழத்துக்காக பப்பாளி சாகுபடி செய்கிறேன். இதில் தினமும் வருமானம் கிடைக்கிறதே என்றார்.
ஏழு அடி இடைவெளி!
ரெட் லேடி ரகத்தின் வயது 22 மாதங்கள். ஆடி, ஆவணி மாதங்கள் நடவுக்கு உகந்தவை. இது, நல்ல சிவப்பு நிறமும், சுவையும் கொண்ட ரகம். ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து 60 டன் முதல் 80 டன் வரை மகசூல் கிடைக்கும். சாகுபடிக்காகத் தேர்வு செய்த நிலத்தை இரு முறை கோடை உழவு செய்து, மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 10 டன் தொழுவுரம் என்ற கணக்கில் கொட்டி இறைத்து, நிலத்தை சமன் செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 900 நாற்றுக்கள் தேவைப்படும். தரமான நாற்றுகளை நர்சரிகளில் வாங்கிக் கொள்ளலாம். ஒரு நாற்று 13 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 7 அடிக்கு 7 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழியெடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு குழியிலும், ஒரு கிலோ நுண்ணுயிர் உரக்கலவையை இட்டு நிரப்பி, நாற்றுகளை நட்டு மண் அணைத்து தேவையான அளவு வட்டப்பாத்திகள் அமைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நேரடிப் பாசனத்தைவிட, சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது.
எட்டாம் மாதம் அறுவடை!
நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து, தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய 150 கிலோ உரத்தை (ஒரு ஏக்கருக்கு ) கொடுக்க வேண்டும். 7-ம் மாதம் வரை பெரிதாக பராமரிப்புத் தேவையில்லை. 8-ம் மாதம் காய் அறுவடைக்கு வந்துவிடும். தொடர்ந்து 14 மாதங்கள் மகசூல் கொடுக்கும்.
இந்தக் காலத்தில் மாதம் தோறும் ஏக்கருக்கு 150 கிலோ அளவுக்கு பயோ மற்றும் ஆர்கானிக் கலப்பு உரங்களைக் கொடுக்க வேண்டும். வளா்ந்த செடிகளில் இருந்து பழுத்த இலைகள் விழுந்து கொண்டே இருக்கும். மரங்களின் அடியில் விழும் இலைகள் மட்கி, அந்த மரத்துக்கே உரமாகி விடும்.
பூச்சிகள்.. கவனம்!
பப்பாளியை அதிகம் தாக்கி சேதப்படுத்துவது மாவுப்பூச்சிகள்தான். ஒட்டுண்ணிகளை விடுவதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
இலைச்சுருட்டுப் புழு, வெள்ளை ஈக்கள் ஆகியவற்றின் தாக்குதலும் பழ அழுகல் நோயும் அதிகமாக வரும். இவற்றைக் கட்டுப்படுத்த, 15 மில்லி பயோ – ஆன்டி வைரஸ் பூச்சிவிரட்டியை 10 லிட்டர் நீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். நோய் தாக்கும் போது, மட்டும் தெளித்தால் போதுமானது. தலா 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கை, செடிக்குச் செடி தூரில் வைத்தால், வேர் சம்பந்தமான நோய்கள் அண்டாது.
மழைநீர் தேங்கி நிற்காதபடி, வடிகால் வசதி செய்து கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை ஒரு செடிக்கு 100 லிட்டர் நீர் கிடைக்குமாறு பாசனம் செய்ய வேண்டும். மரத்தில் உள்ள காய்களின் முகம் பழுக்கும் தருணத்தில், பறிக்கத் தொடங்க வேண்டும்.
விற்பனைக்கு பிரச்னை இல்லை!
திருப்பூர், கோயம்புத்தூர் பக்கம் இருந்து வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து, பறித்து வைத்திருக்கும் பழங்களை எடை போட்டு வாங்கி கொண்டு போய்விடுவார்கள்.
இன்றைக்குத் தேதிக்கு கிலோ 7 ரூபாய் விலைக்கு போகிறது. சராசரியாக வருடத்திற்கு மூன்றரை லட்ச ரூபாய்க்குக் குறையாமல் லாபம் கிடைத்துவிடும். மகசூல் முடிந்ததும், மரங்களை வெட்டி. ரோட்டா வேட்டர் வைத்து உழுது, நிலத்திற்கே உரமாக்கலாம். ரெட் லேடி பப்பாளிப் பழத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், விற்பனைக்குப் பிரச்னையே இல்லை.
பப்பாளிப் பழம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கலை சரி செய்வதற்கும், பெண்களுடைய மாதவிடாய் பிரச்னைக்கும், இது நல்ல பலன் கொடுக்கும். நான் பப்பாளி உற்பத்தியாளர் சங்கத்தை ஆரம்பித்திருக்கிறேன். பப்பாளிக்கு அரசாங்கம் தனி வாரியம் அமைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ள ரகங்களை வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கித் தர வேண்டும் அரசு நாற்றுப் பண்ணைகளில் பப்பாளி நாற்றுகளை உற்பத்தி செய்து மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் நம் மூலமாக அரசுக்கு வைத்து, விடை கொடுத்தார்.

வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில்


தேவையானப் பொருள்கள்:
புழுங்கல் அரிசி_2 கப்
பொட்டுக்கடலை_1/4 கப்
காய்ந்த மிளகாய்_5 லிருந்து 8 க்குள்
தேங்காய்ப்பால்_ஒரு கப் (விருப்பமானால்)
எள்_கொஞ்சம்
ஓமம்_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு
கடலையெண்ணெய்_பொரிக்க‌

செய்முறை:
அரிசியை நீரில் நனைத்து நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு கிரைண்டரில் போட்டு,அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு அல்லது தண்ணீர் தெளித்து மைய அரைக்க வேண்டும்.மிகவும் கெட்டியாகவும் இருக்க வேண்டும்.
பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நல்ல‌ மாவாக இடித்துக்கொள்.
இப்போது அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு,எள்,ஓமம்,பெருங்காயம்,உப்பு   சேர்த்து பிசைந்துகொள்.
மாவு கெட்டியாக இல்லாமல் இருந்தால் பேப்பர் டவலில் அல்லது ஒரு காட்டன் துணியில் சிறிது நேரம் சுருட்டி வைத்தால் ஈரம் போய்விடும்.
இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வை.
எண்ணெய் காய்ந்ததும் விருப்பமான முறுக்கு அச்சைப் பயன்படுத்தி, பிசைந்த மாவில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும். (அல்லது அப்படியே வாணலியில்கூட பிழிந்துவிடலாம்.)
எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு(எண்ணெய் கொண்ட மட்டும்) இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.இப்போது புழுங்கல‌ரிசி முறுக்கு தயார்.


பச்சரிசி முறுக்கைவிட புழுங்கலரிசி முறுக்குதான் சுவையாக இருக்கும்.என்ன,கொஞ்சம் வேலை வாங்கும்.அவ்வளவுதான்.

ஆப்பம் & தேங்காய்ப்பால்




ஆப்பத்திற்கு தேங்காய்ப்பால்தான் பெஸ்ட் காம்பினேஷன்.ஊரில் என்றால் ஆப்பத்தை செய்து வைத்துவிட்டுக்கூட  தேங்காய் பறித்து அல்லது வாங்கி பால் பிழிந்துவிடலாம்.ஆனால் இங்கு (USA  ) புதிய காய்தானா என்று  உறுதி செய்துகொண்டு முதல் நாளே சிறிது பால் எடுத்து பார்த்துவிட்டுத்தான்  ஆப்பத்திற்கு அரிசி ஊற வைக்க வேண்டும்.
தேவையானப் பொருள்கள்:
பச்சரிசி_2 கப்
புழுங்கல் அரிசி_2 கப்
வெந்தயம்_ஒரு டீஸ்பூன்
பழைய சாதம்_ஒரு கைப்பிடி
உப்பு_தேவைக்கு
ஆப்பம் செய்முறை::
வெந்தயத்தை முதல் நாளிரவே ஊற வை.
அடுத்த நாள் அரிசியை ஊற வை.நன்றாக ஊறியதும் அரிசி,வெந்தயம்,சாதம் மூன்றையும் சேர்த்து நன்றாக நீர் விட்டு மழமழவென அரைக்க வேண்டும்.
பிறகு உப்பு கொஞ்சம் குறைவாக சேர்த்து கரைத்து வை.
இனிப்பான பால் சேர்த்து சாப்பிடும்போது உப்பு கொஞ்சம் குறைவாக இருந்தால்தான் சுவை நன்றாக இருக்கும்.
அடுத்த நாள் பார்த்தால் மாவு புளித்து,நன்றாகப் பொங்கி வந்திருக்கும்.
ஆப்பம் ஊற்றும்போது சிறிய அளவில் மாவை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்.
மீதி மாவை எடுத்து வைத்தால் அடுத்த வேளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்போது ஆப்ப சட்டியை அடுப்பில் ஏற்றி சூடாகியதும் லேசாக எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை விட்டு இரண்டு கைகளாலும் சட்டியின் கைப்பிடியைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றிவிட்டு மூடிபோட்டு மிதமானத் தீயில் வேக வை.
ஆப்பம் வெந்ததும் (சிவக்க வேண்டாம்) தோசைத் திருப்பியால் அல்லது கைகளால்கூட எடுத்துவிடலாம்.ஓரங்கள் தானே பெயர்ந்து வந்துவிடும்.
அதன்பிறகு என்ன!ஒரு குழிவானத் தட்டில் ஆப்பத்தை வைத்து தேங்காய்ப்பாலை ஆப்பம் கொஞ்சம் மூழ்கும் அளவுக்கு ஊற்றி சாப்பிட வேண்டியதான்.



தேங்காய்ப் பாலை சட்னி போல் தொட்டு சாப்பிட வேண்டாம்.அது நன்றாக இருக்காது.
இரண்டு ஆப்பம்தான் லிமிட்.அதற்கு மேல் என்றால் திகட்டிவிடும்.
தேங்காய்ப் பால் செய்முறை:

இரண்டு மூன்று பேர் என்றால் ஒரு மூடி தேங்காய் போதும்.
நல்ல சதைப்பற்றுள்ள தேங்காய் மூடி_1
சர்க்கரை_தேவைக்கு (நிறையவே தேவைப்படும்.பால் நல்ல இனிப்பாக இருக்க வேண்டும்)
பசும்பால்_1/2 டம்ளர் (விருப்பமானால்)
ஏலக்காய்_1 (இதுவும் விருப்பமானால்)


ஒரு மூடி தேங்காயைத் துருவியோ அல்லது சிறுசிறு துண்டுகளாக்கியோ மிக்ஸியில் போட்டு  pulse    ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் பூ போலாகிவிடும்.
பிறகு சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து இரண்டு டம்ளர் அல்லது தேவையான அளவிற்கு மிதமான‌ சுடு தண்ணீர் விட்டு பாலை வடிகாட்டிப்  பிழிந்துகொள்.
அதனுடன் பசும்பால் 1/2 டம்ளர் அளவிற்கு காய்ச்சி சேர்த்துக்கொள்.(விருப்பமானால்)
தேங்காய்ப்பாலில்  ஏலக்காய்,சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை ஒரு கரண்டியால் கலக்கிவிடு.
இப்போது தேங்காய்ப்பால் தயார்.
குறிப்பு:  
சமயத்தில் ஆப்ப மாவு இல்லாவிட்டால் தோசை மாவைக்கூட ஆப்பத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.


தேவையானப் பொருள்கள்:
உடைத்த கறுப்பு உளுந்து_1 கப்
புழுங்கல் அரிசி_1 கப்
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10
பச்சை மிளகாய்_2
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_ஒரு துளி
கறிவேப்பிலை_5
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
உளுந்து,அரிசி இரண்டையும் தனித்தனியாக நீரில் ஊற வை.உளுந்து நன்றாக ஊறியதும்(சுமார் 3 மணி நேரம்) தோலைக் கழுவிக் களைந்து நீரை வடிகட்டி விட்டு ஃபிரிட்ஜில் சுமார் 1/2 மணி நேரத்திற்கு வை. பிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டுத் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.இடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும்.குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.கெட்டியாக இருக்க வேண்டும்.நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும்.அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.
அடுத்து  அரிசியைக் கழுவிக் களைந்து  அதே கிரைண்டரில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றாமல் கெட்டியாக மைய அரைக்கவும்.அதனுடன் பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு வழித்து உளுந்து மாவுடன் சேர்த்து பிசையவும்.
இப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி,பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.
எண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.மாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடு.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.
இவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பக்க உணவாகப் பரிமாரலாம்.
குறிப்பு:
வீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால் இஞ்சி,பச்சை மிளகாயை அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.அவர்கள் ஒருமுறை வடையில் உள்ள மிளகாயைக் கடித்து விட்டால் மீண்டும் அதைச் சாப்பிடத் தயங்குவார்கள்.எனவே அரிசியுடன் சேர்த்து அரைத்து விடலாம்.
தட்டை (அ) எள்ளடை


தேவையானப் பொருள்கள்:
புழுங்கல் அரிசி_2 கப்புகள்
பொட்டுக்கடலை_1/2 கப்
கடலைப் பருப்பு_1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_6(காரத்திற்கேற்ப)
பூண்டு_2 பற்கள்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
புழுங்கல் அரிசியை தண்ணீரில் நனைத்து ஊற வை.நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அரைக்கும் போதே அதனுடன் பூண்டு,காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்தெடு.மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும்.அதே சமயம் மழமழவென அரைக்க வேண்டும்.அப்பொழுதுதான் எள்ளடை மொறுமொறுப்பாக இருக்கும்.இல்லை எனில் கடினமாக இருக்கும்.
பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து மாவாக்கு.மாவு மழமழவென இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு,பொட்டுக்கடலை மாவு,கடலை பருப்பு,பெருங்காயம்,உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.பிசைந்த மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.அதுதான் சரியான மாவு பதம்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி சூடேற்று.மாவில் இருந்து ஒரு கோலி அளவு எடுத்து உருண்டையாக்கி பேப்பர் டவலில் வைத்து வட்டமாகத் தட்டவும்.மாவில் உள்ள கடலைப் பருப்பு வெளியில் தெரிய வேண்டும்.அவ்வளவு மெல்லியதாகத் தட்ட வேண்டும்.
எண்ணெய் சூடேறியதும் நான்கைந்தாகப் போட்டு வேக வை.ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் சிவந்ததும் எடுத்து ஆற வை.இதுபோல் எல்லாவற்றையும் போட்டு ஆற வைத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எடுத்து வை.இப்போது சுவையான,மொறுமொறுப்பான எள்ளடைத் தயார்.
குறிப்பு:
விருப்பமானால் மாவு பிசையும் போது எள் 1 டீஸ்பூன்,கறிவேப்பிலை கொஞ்சம் கிள்ளிப் போட்டு தட்டலாம்.எள்ளடையை புழுங்கல் அரிசியில் செய்தால்தான் நல்ல சுவையாக,மொறுமொறுப்பாக இருக்கும்.

வடாம் (மற்றொரு வகை)



தேவையான பொருள்கள்
புழுங்கல் அரிசி_2 கப்
பச்சை மிளகாய்_2
சீரகம்_1டீஸ்பூன்
ஜவ்வரிசி_சுமார் 1 கப்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
செய்முறை:
அரிசியை கழுவிக் களைந்து ஊற வை.நன்றாக ஊறியதும் கிரைண்டரில் போட்டு மைய அரைத்தெடு.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வை.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும்.காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக, பிசைந்த தட்டை மாவு பதத்தில் இருக்கும். இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்)  ,  சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்.உப்பு,காரம் சரி பார்த்துக்கொள்.
இப்பொழுது மாவிலிருந்து ஒரு சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில்(அ)பிளாஸ்டிக் பேப்பரில் தட்டை போல் தட்டிக்கொள்ளவும்.இதுபோல் எல்லா மாவையும் தட்டி வைத்து இட்லிப் பானையில் இட்லி அவிப்பது போலவே  (ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல்) வேக வைக்க வேண்டும்.வெந்ததும் எடுத்து தட்டில் கொட்டி வெய்யிலில் காய வை.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலரவிடலாம்.
நன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில்  எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம்.இதைப் பொரிக்கும் போது வெள்ளைப் பூ மாதிரி வரும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
பொரிக்கும் விதம்:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு வடாமாகப் போட்டு  பொரித்தெடு. இரு பக்கமும் திருப்பி விட வேண்டாம்.சிவக்க வைக்கவும் வேண்டாம்.

முறுக்கு வடாம்



தேவை:
புழுங்கல் அரிசி_2 கப்
பச்சை மிளகாய்_2
சீரகம்_1டீஸ்பூன்
ஜவ்வரிசி_1/2 to  1 கப்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
செய்முறை:
அரிசியை ஊற வை.நன்றாக ஊறியதும்(4 அ  5 மணி நேரம்) கழுவிக் களைந்து கிரைண்டரில் மைய அரைத்தெடு.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வை.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும்.காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் இருக்கும். இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்)  ,  சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்.உப்பு,காரம் சரி பார்த்துக்கொள்.
முறுக்கு அச்சில் கொஞ்சமாக மாவை எடுத்துக்கொள்.அடுத்து  இட்லிப் பானையை அடுப்பில் வைத்து ஒரு இட்லித் தட்டில் ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் சிறுசிறு முறுக்குகளாக அல்லது தட்டு முழுவதும் ஒரு பெரிய முறுக்காக பிழிந்து விட்டு வேக விடு.நன்றாக வெந்ததும் எடுத்து தனித்தனியாக தட்டில் வைத்து வெய்யிலில் காயவை.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலர்த்தலாம்.ஏற்கனவே வெந்து இருப்பதால் சீக்கிரமே காய்ந்துவிடும்.
நன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில்  எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம்.வெள்ளை முறுக்கு போலவே இருக்கும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
பொரிக்கும் விதம்:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு முறுக்காகப் போட்டு இரு புறமும் திருப்பி விட்டு பொரித்தெடு.சிவக்க வைக்க வேண்டாம்.

முறுக்கு மாவு தயாரித்தல்



தேவை:
உளுந்து_ 1 கப்
பச்சைப் பயறு_1/2 கப்
கடலை பருப்பு_1/4 கப்
புழுங்கல் அரிசி_ 1/4 கப்
பொட்டுக் கடலை_ 1/4 கப்
செய்முறை:
மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் வெறும் வாணலியில் தனித் தனியாக சிவக்க வறுத்து ஆற வைத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு மழமழவென்று அரைக்க வேண்டும்.(இரண்டு விரல்களுக்கிடையில் மாவை எடுத்து தேய்த்துப் பார்த்தால் மழமழவென்று இருக்க வேண்டும்).இதற்கு நம் ஊர் மிக்ஸி தான் எற்றது.இங்குள்ள மிக்ஸி(USA)சரியாக வராது என்றே நினைக்கிறேன்.மாவை ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து மூடி வைத்துக் கொள்.மேலே கூறிய விகிதத்தில் எவ்வளவு வேன்டுமானாலும் அரைத்துக் கொள்ளலாம்.அடுத்த பதிவில் முறுக்கு செய்வதைப் பற்றி பார்க்கலாம்.

இட்லி



தேவையானவை
புழுங்கல் அரிசி – 8 கப்புகள்
உளுந்து – 1/2 கப்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
செய்முறை
வெந்தயத்தை முதல் நாள் இரவே அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துவிட வேண்டும்.அடுத்த நாள் அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக ஊறவிட வேண்டும்.சுமார் ஆறு மணி நேரம் ஊறவிட வேன்டும்.பின் உளுந்தின் தோலியைக் கழுவி விட்டு ஃபிரிட்ஜில் ஒரு அரை மணி நேரத்திற்கு வைத்து விட வேண்டும்.வெந்தயத்தையும் அவ்வாறே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.பிறகு உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து  கிரைண்டரில் போட்டு நீர் விட்டு கொடகொடவென மைய அரைக்க வேண்டும்.ஒரு 1/2  மணி நேரம் ஆன பிறகு(இடை இடையே சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்)  ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து கொடகொடவென கொடப்பி வைக்கவும்.இல்லை எனில் மாவு அமுங்கிவிடும்.பிறகு அரிசியைப்போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான உப்பு போட்டு நன்றாகக் கரைத்து வைக்கவும்.அடுத்த நாள் பார்த்தால் மாவு நன்றாக பொங்கி வந்திருக்கும்.இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும். வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும். வெண்மையான பஞ்சு போன்ற இட்லிகளாக வரும்.தோசை வேண்டும் எனில் கொஞ்சம் மாவை தனியாக எடுத்து சிறிது நீர் விட்டு கரைத்து தோசையாக வார்க்கலாம். நமக்கு விருப்பமான சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்பிடலாம்.

மஸ்கோத் அல்வா’ manufacture

வாயில் போட்டதுமே கரைந்து, நம்மை மயக்குவது ‘திருநெல்வேலி அல்வா’. அதே நெல்லைச் சீமையில் கடந்த பத்தாண்டுகளில் வளர்ந்து விரிந்து பட்டையைக் கிளப்பி வருகிறது ‘மஸ்கோத் அல்வா’.


‘இது எங்க ஊரு அல்வா’ன்னு தூத்துக்குடிக்காரங்க பெருமை பேசும் அளவிற்கு பிரபலமாகி இருக்கிறது இந்த மஸ்கோத் அல்வா. நெல்லை மாவட்டம் திசையன்விளையிலும், தூத்துக்குடி மாவட்டம் முதலூரிலும் இந்த அல்வா தயாரிப்புதான் இன்று முக்கிய தொழில்.

மஸ்கோத் அல்வாவில் முதலூர் பெயர் தனியிடம் பெற்று விட, இன்று பல ஊர்க்காரர்களும் இதே பெயரில் இந்தத் தொழிலைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

பெரிய அளவில் கமர்ஷியலாக பணம் போட்டு பல லட்சம் சம்பாதிக்கும் மஸ்கோத் அல்வா தயாரிப்புப் போட்டியில் இன்று இரு மகளிர் சுய உதவிக் குழுக்களும் வெற்றிகரமாக தரமான அல்வாவை உற்பத்தி செய்து சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

நேற்று வரை அன்றைய பொழுதுக்குத் தேவையான முப்பது ரூபாய்க்குக் கூட வழியில்லாமல் வறுமையில் இருந்த முதலூரைச் சேர்ந்த 30 பெண்கள், ஒன்று சேர்ந்து இந்தத் தொழிலில் இறங்கி மாதம் ஒன்றுக்கு சராசரியாக 60 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பார்க்கிறார்கள்.

இந்த சாதனை எப்படி சாத்தியமானது?

‘‘நாங்க இரண்டு குழுக்கள் இணைஞ்சு இந்த பிசினஸ் பண்றோம். ஒவ்வொரு குழுவிலும் 15 பேர் வீதம் 30 பேர் உறுப்பினர்களா இருக்கோம். முதல்ல 3 குழுக்களா இணைந்து இந்த தொழிலைத் தொடங்கினோம். அதுல ஒரு குழு பிரிந்து, இப்ப நாங்க இரண்டு குழுவுமா சேர்ந்து இயங்கி வர்றோம். முன்னாடி எல்லாருமே கூலி வேலைக்குத்தான் போயிட்டு இருந்தோம். மகளிர் சுய உதவிக் குழுவைத் தொடங்கினா லோன் கொடுப்பாங்க. ஏதாவது தொழில் செய்யலாம்னு சொன்னாங்க. அப்படித்தான் இதைத் தொடங்கினோம். குழு தொடங்கறதுக்கு ‘வீட்ஸ் தொண்டு நிறுவனம்’ பயிற்சி கொடுத்தாங்க. அரசு அதிகாரிங்க வந்து எப்படிக் குழுவை இயக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்க.

அப்போ நாங்க மஸ்கோத் அல்வா தயார் பண்றவங்ககிட்ட தனியா வேலைக்குப் போயிக்கிட்டு இருந்தோம். வேற எதுனா தொழில செய்றத விட இந்த அல்வா பிசினஸையே எடுத்துப் பண்ணலாம்னு முடிவு பண்ணினோம்.. அது இப்போ எங்களுக்கு கைகொடுத்து உதவுது. எங்களோட செயல்பாட்டைப் பார்த்துட்டு பேங்க்ல 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபா லோன் கொடுத்தாங்க.’’ என்றார்கள் தென்றல், வசந்தம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தலைவிகள் பால்கனியும், ஜெயராணியும்.

‘’ஒரு சட்டி அல்வா கிண்டினா 12 கிலோ வரைக்கும் கிடைக்கும். ஒரு சட்டிக்கு எல்லாம் போக கைக்கு 250 ரூபா நிக்கும். ஒரு நாளைக்கு சராசரியா 15 கிலோ வரைக்கும் பேக் பண்ணுவோம். நல்ல ஆர்டர் கிடைச்சா கொஞ்சம் கூடும். தூத்துக்குடி பனிமய மாதா கோயில்ல இருந்து அப்பப்ப எங்ககிட்ட ஆர்டர் கொடுத்து வாங்குவாங்க. குமரி மாவட்டத்தில இருந்து சிலர் விரும்பி வாங்குறாங்க. கோயம்புத்தூர், சென்னை, டில்லி மாதிரி ஊருக்கெல்லாம் எங்க அல்வா போகுது. சில பெரிய கம்பெனிங்க அவங்களுக்கு கூடுதலா ஆர்டர் வந்து குறிப்பிட்ட நேரத்திற்குப் பண்ண முடியாம எங்கிட்ட சப் - காண்ட்ராக்டா கொடுத்து செய்து தரச் சொல்வாங்க. அதையும் நாங்க செய்து கொடுக்கிறோம்’’ என்கிறார் ஜெயராணி.

‘அல்வா பிசினெஸ் தொடங்கிய போது ஏதேனும் சங்கடங்கள் இருந்ததா?’ இதை அவர்களிடமே கேட்டோம்.

‘’கஷ்டம் இல்லாம இருக்குமா...! நல்லா அல்வா செய்யத் தெரிஞ்ச நமக்கு விக்கத் தெரியாது. யாரும் பெருசா வாங்கல. இதனால முதல்ல நஷ்டப்பட்டோம். விட்டுறலாமான்னு கூட நினைச்சோம். சமயத்தில மனசே தளர்ந்து போயிரும். அரசு அதிகாரிகள் வந்து ‘கவலைப்படாதீங்கம்மா முதல்ல அப்படித்தான் இருக்கும்’னு சொல்வாங்க. அப்புறம்த்தான் கொஞ்சம் கொஞ்சமா விற்க ஆரம்பிச்சி இப்ப லாபத்தைப் பார்க்கிறோம். .

பொருட்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக ஸ்டால் போட வந்து நைட் தங்கக்கூட இடமில்லாம பஸ் ஸ்டாண்ட்ல படுத்துத் தூங்குன அனுபவமெல்லாம் எங்களுக்கு உண்டு.. ஆனா அதையெல்லாம் தாண்டி இப்போ குழு நல்லா இயங்குது. பேங்க்ல கொடுத்த லோன கட்டி முடிச்சிட்டோம்.’’என்று மனநிறைவோடு சொல்கிறார் பால்கனி.

‘‘சராசரியா ஒருத்தருக்கு ஒரு மாசத்துக்கு 1,500 ரூபா முதல் 2,000 ரூபா வரைக்கும் வருமானம் கிடைக்குது. ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்குக் கூட வழியில்லாம நின்னோம். இப்போ ஒண்ணா சேர்ந்து குழுவா செய்றதலா இந்தப் பணம் எங்களுக்குக் கிடைக்குது. இந்த 2 ஆயிரம் ரூபாயை 20 ஆயிரம் ரூபாயா மாத்தணும்..... இதுதான் எங்களோட ஆசை.....’’ என்கின்றனர் தென்றல் - வசந்தம் மகளிர் சுய உதவிக் குழுவினர்.

‘ஊர் கூடித் தேர் இழுத்தால் ஆதாயம்’ என்பதை முதலூரில் உள்ள இந்தப் பெண்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

மஸ்கோத் ஆன மஸ்கட்
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட். அங்கு தேங்காய்ப் பாலில் செய்யும் அல்வா ஃபேமஸ். மஸ்கட்டிலிருந்து இலங்கைக்குச் சென்றவர்கள் இந்த அல்வாவின் மணத்தை இலங்கைக்குப் பரப்ப, அங்கிருந்து புலம் பெயர்ந்த முதலூர்காரர்கள் நெல்லை & தூத்துக்குடி மண்ணில் இந்த அல்வாவை செய்து கொடுக்க, இன்று முதலூர் மண்ணின் முக்கியத் தொழிலாகி விட்டது மஸ்கட்... சாரி.... மஸ்கோத் அல்வா. பொதுவா அல்வான்னா எண்ணெய், வனஸ்பதி அல்லது நெய்யை பயன்படுத்தி செய்றதுதான் வழக்கம். ஆனா மஸ்கோத் அல்வாவோட ஸ்பெஷாலிட்டியே தரமான தேங்காய்ப் பாலில் செய்வதுதான். தேங்காய்ப் பால்தான் இந்த அல்வாவின் முக்கிய மூலப்பொருள்.

மெழுகுவர்த்தி தயாரிப்பில் ஜொலிக்குது லாபம்


மெழுகுவர்த்தி தயாரிக்கும் கலை பழமையானது. அன்று தொடங்கி இன்று வரை மெழுகுவர்த்திக்கு மக்கள் மத்தியில் நல்ல கிராக்கி உள்ளது. வழிபாடு, மின்தடை நேரங்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது மெழுகுவர்த்தியை தான். எனவே இதை தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டால் வாழ்வே வெளிச்சமாகும்‘ என்று கூறுகிறார் ஈரோடு ‘அம்மன் கேண்டில் ஒர்க்ஸ்‘ உரிமையாளர் மகேஸ்வரி. அவர் கூறியதாவது: குறைந்த முதலீட்டில் எளிதாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். மெழுகுவர்த்தி தயாரித்து விற்கலாம் என முடிவு செய்து 10 நாட்களில் தொழிலை கற்றுக்கொண்டேன்.

படிப்படியாக தொழிலில் உள்ள நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன். முதலில் வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைகளில் ஆர்டர்கள் பெற்று அதற்கேற்ப தயாரித்து விற்றேன். படிப்படியாக டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் உள்பட பல்வேறு இடங்களில் விற்க துவங்கினேன். தொழில் விரிவடைந்ததோடு நல்ல வருமானமும் கிடைத்தது. பிறகு மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க தொடங்கினேன். தற்போது பல பெண்கள் என்னிடம் பயிற்சி பெறுகிறார்கள். வீட்டில் உள்ள பெண்கள் இத்தொழில் மூலம் தங்கள் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

இதில், வேலைப்பளு குறைவு. குறைந்த முதலீடு, இட வசதி போதுமானது. ஒருவர் மட்டும் உழைத்தாலே போதும். வீட்டிலேயே இதை நல்ல முறையில் நடத்த முடியும். தினமும் குறைந்தது 5 கிலோ, அதிகபட்சம் 25 கிலோ மெழுகுவர்த்தி தயாரிக்க முடியும். இதற்கு ஹேண்ட் மெஷின், செமிஆட்டோமெடிக் என்ற இரு வகை மெஷின்கள் உள்ளது.  ஹேண்ட் மெஷின் ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது. செமி ஆட்டோமெடிக் மெஷின் வாங்க ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. செமி ஆட்டோமெடிக் மூலம் நாள் ஒன்றுக்கு 75 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். தொழில் தொடங்க, வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும்.

பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டம், கதர் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவற்றில் 35 சதவீத மானியத்தில் வங்கி கடன் எளிதாக பெற முடியும். கிராமமாக இருப்பின் கடன் தொகையில் 35 சதவீதமும், நகர்ப்புறமாக இருப்பின் 25 சதவீதமும், பெண்களுக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் எந்தவித கேரண்டியும் கேட்பதில்லை. இவ்வாறு மகேஸ்வரி கூறினார்.

என்னென்ன தேவை?

பெட்ரோல் கழிவில் இருந்து கிடைக்கும் மெழுகு, காட்டன்நூல், அச்சு, அலுமினிய டிரே, மெழுகு ஊற்றுவதற்கான கோப்பை, கட் செய்ய சிறிய கத்தி, மெழுகு உருக்க அடுப்பு, அச்சில் மெழுகு ஒட்டாமல் இருக்க தேங்காய் எண்ணெய், கலர் வருவதற்கு புளோரிசன் கெமிக்கல், தண்ணீர் ஊற்றுவதற்கான பக்கெட், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள்.

தயாரிக்கும் முறை

கடைகளில் கிடைக்கும் மெழுகை வாங்கி வந்து ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு சூடேற்ற வேண்டும். அச்சில் மெழுகு ஒட்டாமல் வருவதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக தடவவேண்டும். சூடேற்றிய மெழுகை அச்சில் ஊற்ற வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து மெழுகு ஊற்றப்பட்ட அச்சை வாளி தண்ணீரில் போட வேண்டும். சூடாக இருந்த மெழுகு மற்றும் அச்சு குளிர் நிலைக்கு வந்ததும், அச்சில் இருந்து மெழுகுவர்த்திகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். மெழுகுவர்த்தியை நீளமாக தான் உருவாக்க வேண்டும் என்று இல்லை. எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.

வெள்ளை கலரில் மட்டுமல்ல; எந்த வண்ணத்தில் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். என்ன வண்ணம் தேவைப்படுகின்றதோ அதற்கு ஏற்ற கலர் கெமிக்கல்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மெழுகில் சேர்த்தால் வண்ண மெழுகுவர்த்தி கிடைக்கும்.

ரகங்கள்

லோக்கல், வெள்ளை, கலர், கப், சிலை, ஜெல் என ஏராளமான வகைகளில் மெழுகுவர்த்திகள் உள்ளன. லோக்கல் என்பது நீளமாக இருக்கும் மெழுகுவர்த்தியை குறிக்கிறது. ஒவ்வொரு வகைக்கும் அச்சுகள் உள்ளது. அவற்றின் மூலம் பல்வேறு வகைகளில் தயாரிக்கலாம்.

முதலீடு

1 கிலோ மெழுகு தற்போது கடைகளில் ரூ.95க்கு விற்கப்படுகிறது. அச்சு வாங்க ரூ.500, டிரே ரூ.100, தேவையான எரிபொருள், பக்கெட் ரூ.50, காட்டன் நூல் (திரி) ஒரு கிலோ ரூ.120, கை மெஷின் ரூ.300. எடை போடுவதற்கான எலக்ட்ரானிக்ஸ் தராசு ரூ.400 என மொத்தம் ரூ.1,600 இருந்தால் போதுமானது.

வர்த்தக வாய்ப்பு

உற்பத்தி செய்த மெழுகுவர்த்திகளை மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை அணுகி ஆர்டர்கள் பெற்று விற்கலாம். மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்வதற்காக தனியே கடைகளும் உள்ளன. சர்ச்களிலும் ஆர்டர்கள் பெற முடியும்.

வருமானம்

ஒரு கிலோ மெழுகு ரூ.95க்கு கடைகளில் கிடைக்கிறது. இதை மெழுகுவர்த்தியாக தயாரித்து ஒரு கிலோ ரூ.120க்கு விற்கலாம். பெரும்பாலும் கடைகளுக்கு கிலோ கணக்கில் மட்டுமே விற்கப்படுவதால் ஒரு கிலோ விற்றால் ரூ.25 லாபம் கிடைக்கிறது. திரி தயாரிக்க பயன்படும் காட்டன்நூல், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவும் குறைவு. ஒரு நாளைக்கு சாதாரணமாக 20 கிலோ வரை மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம். ஒரு கிலோவுக்கு ரூ.25 லாபம் கிடைக்கிற நிலையில் 20 கிலோவுக்கு ரூ.500 வரை வருமானம் கிடைக்கிறது. பேக்கிங் செலவு, பாலிதீன் கவர்கள், காட்டன் நூல் செலவு உள்ளிட்டவற்றை கழித்தால் ரூ.450 வரை உறுதியாக லாபம் ஈட்ட முடியும். ஆர்டர்கள் தொடர்ந்து கிடைத்தால் மாதம் ரூ.13,500 வரை லாபம் ஈட்ட முடியும்.

டிப்ஸ்: திரி மூழ்காதவாறு தண்ணீரில் வைத்தால், 2 மணி நேரம் எரியும் மெழுகுவர்த்தி 3 மணி நேரம் எரியும்.




















உதரனம்மாக குறும் படம் பார்க்கவும்

செயற்கை ரப்பர் பயன்பாடு 4.23 லட்சம் டன்னாக உயர்வு

புதுடில்லி: உள்நாட்டில், செயற்கை ரப்பர் பயன்பாடு, கடந்த 2011-12ம் நிதியாண்டில், 4.23 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டை விட, 3 சதவீதம் (4.12 லட்சம் டன்) அதிகம் என, ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உற்பத்திஅதேசமயம், சென்ற நிதியாண்டில், உள்நாட்டில், இதன் உற்பத்தி, 1.11 லட்சம் டன்னாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 1.10 லட்சம் டன்னாக காணப்பட்டது. உள்நாட்டில், செயற்கை ரப்பர் உற்பத்தி குறைவாக இருப்பதால், நம் நாடு, வெளி நாடுகளிலிருந்து, இதை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது.கணக்கீட்டு ஆண்டுகளில், செயற்கை ரப்பர் இறக்குமதி, 8 சதவீதம் அதிகரித்து, 3.02 லட்சம் டன்னிடருந்து, 3.28 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த செயற்கை ரப்பர் பயன்பாட்டில், வாகன டயர் தயாரிப்பு நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் அதிகளவில் உள்ளது.சென்ற நிதியாண்டில், டயர் தயாரிப்பு நிறுவனங்களின் செயற்கை ரப்பர் பயன்பாடு, 3 சதவீதம் அதிகரித்து, 2.98 லட்சம் டன்னிலிருந்து, 3.08 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.டயர் தயாரிப்பு தவிர, டியூப்கள், காலணிகள், பெல்டுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், செயற்கை ரப்பர் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.உள்நாட்டில், இயற்கை மற்றும் செயற்கை ரப்பர் பயன்பாடு, 69:31 என்ற விகிதத்தில் உள்ளது. கணக்கீட்டு ஆண்டுகளில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 2 சதவீதம் வளர்ச்சிகண்டு, 9.47 லட்சம் டன்னிலிருந்து, 9.66 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.நடப்பாண்டு மார்ச் மாதத்தில், உள்நாட்டில், செயற்கை ரப்பர் பயன்பாடு, 36,280 டன்னாகஅதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 36,025 டன்னாக இருந்தது.வாகன விற்பனைஇருப்பினும், சர்வதேச சுணக்க நிலையால், நடப்பாண்டில், உள்நாட்டில், வாகன விற்பனையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், டயர் தயாரிப்பு நிறுவனங்களின், செயற்கை ரப்பர் பயன்பாடு, சென்ற மார்ச் மாதத்தில், 26,289 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 26,295 டன்னாக இருந்தது.இதே மார்ச் மாதங்களில், செயற்கை ரப்பர் உற்பத்தி, 9,343 டன்னிலிருந்து, 8,135 டன்னாக சரிவடைந்துள்ளது. அதேசமயம், இறக்குமதி, 26, 275 டன்னிலிருந்து, 30,300 டன்னாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, 50,325 டன் செயற்கை ரப்பர் கையிருப்பு இருந்ததாக என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.

ரெக்சின் பை தயாரிப்பது எப்படி


சாதாரண பர்ஸில் ஆரம்பித்து, கைப்பை, பயணப்பை என எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பலரும் உபயோகிப்பது ரெக்சினால் செய்யப்பட்டவற்றையே... விலை அதிகம், விலங்குகளின் தோலிலிருந்து தயாரிக்கப்படுவது எனப் பல காரணங்களுக்காக தோல் பைகளைத் தவிர்ப்பவர்களுக்கும் ரெக்சின் பைகளே சரியான மாற்று!
ரெக்சின் பைகள் தைத்து விற்பனை செய்வதையே முழு நேரத் தொழிலாகச் செய்கிறார் விழுப்புரம் மாவட்டம் கெடிலத்தைச் சேர்ந்த பேபி மலர். 'பத்தாவது படிச்சிருக்கேன். மேல படிக்க வசதியில்லை. ஏற்கனவே தையல்ல ஆர்வம் இருந்ததால, ரெக்சின் பை தைக்க கத்துக்கிட்டேன். பேங்க் லோன் போட்டு, அதையே ஒரு பிசினஸாவும் ஆரம்பிச்சு நடத்திட்டிருக்கேன். பர்ஸ், ஸ்கூல் பை, ஆபீஸ் பை, மார்க்கெட் பைனு பல மாடல்கள் பண்றேன். எல்லா நாளும், எல்லா மக்கள்கிட்டயும் வரவேற்பு உள்ள பிசினஸ் இது. சுலபமா கத்துக்கிட்டு, குறைஞ்ச முதலீட்டுல ஆரம்பிக்க ஏற்ற தொழிலும்கூட’’ என்கிற பேபி, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு அதற்கான வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘ரெக்சின் (குவாலிட்டிக்கேத்தபடி நாலஞ்சு வெரைட்டில கிடைக்குது), ரன்னர்னு சொல்ற ஜிப்புக்கு இடையில வர்ற பாதை, ஜிப், நூல், கிளிப், தையல் மிஷின்...
தையல் மிஷினோட சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் முதலீடு போதும்!’’

 எத்தனை மாடல்கள்? என்ன விலை?

‘‘ஏற்கனவே சொன்ன மாதிரி கைக்கு அடக்கமான பர்ஸ்லேர்ந்து, குழந்தைங்களுக்கான லஞ்ச் பேக், புத்தகப்பை, காய்கறி வாங்கக் கொண்டு போகிற பை, ஆபீஸ் உபயோகத்துக்கு, வெளியூர் போகிறப்ப கொண்டு போக.... இப்படி
எத்தனை மாடல் வேணாலும் பண்ணலாம். சின்ன சைஸ் மார்க்கெட் பையை 60 ரூபாய்க்கும், புத்தகப்பையை 120 ரூபாய்க்கும் விற்கலாம். பையோட சைஸைப் பொறுத்து விலையை நிர்ணயம் பண்ணிக்கலாம். கடைகள்ல கிடைக்கிறதைவிட பத்து ரூபாய் குறைவா கொடுக்கிறது மூலமா நிறைய ஆர்டர்களை பிடிக்க முடியும். எந்த சைஸ் பைலயும் 30 சதவிகித லாபம் நிச்சயம்!’’

ஒரு நாளைக்கு எத்தனை பை?

‘‘ஒரே ஒரு தையல் மிஷின் வச்சுக்கிட்டு, உதவிக்கு ஆளில்லாம தைக்கிறவங்க 4 பைகள் தைக்கலாம்.’’

பயிற்சி..?

‘‘ஒரு வாரப் பயிற்சில 5 மாடல் பைகள் கத்துக்கலாம். 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மெட்டீரியலோட சேர்த்துக் கட்டணம்
5 ஆயிரம் ரூபாய்.’’
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என ஆசையைத் தூண்டுகின்றன சித்ரா லிங்கேஸ்வரன் கைவண்ணத்தில் உருவாகிற பைகள். அத்தனையும் குட்டீஸ் ஸ்பெஷல்! குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் உருவங்களில் பலவித பைகள் செய்வதில் நிபுணியான சித்ரா, தனக்குத் தெரிந்த இத்தொழிலை மற்றவர்களுக்குக் கற்றுத்
தரவும், தொழிலாகத் தொடங்க வழிகாட்டவும் தயாராக இருக்கிறார்.
‘‘பி.காம் படிச்சிருக்கேன். பொம்மைகள் ரொம்பப் பிடிக்கும். முதல்ல பொம்மைகள் செய்யக் கத்துக்கிட்டேன். பொம்மை வடிவத்துலயே குழந்தைகளுக்கான பைகள் வர ஆரம்பிச்சதும், அதையும் செய்து பார்த்தேன். பெரியவங்களுக்கு சொல்லிக் கொடுக்கிற மாதிரியே இதை குழந்தைங்களுக்கும் ஒரு விளையாட்டான பயிற்சியா கத்துக் கொடுக்கலாம். கைத்தொழில் கத்துக்கிட்ட மாதிரியும் ஆச்சு. பொழுதுபோக்கும் கூட’’ என்கிறவருக்கு 150 மாடல்களில் பொம்மைகளும், இருபதுக்கும் மேற்பட்ட மாடல்களில் பைகளும் செய்யத் தெரியுமாம்.
என்னென்ன தேவை? முதலீடு?
‘‘ஃபர் கிளாத், முகங்கள், ஜிப், லைனிங் துணி, மாட்டிக்கிறதுக்கான வார், ஊசி, நூல்... பைகளை தையல் மிஷின்லயும் தைக்கலாம். இல்லாதவங்க கைகளாலயும் தைக்கலாம். 5 மாடல் பைகளுக்கு 500 ரூபாய் முதலீடு இருந்தா போதும்.’’
என்ன ஸ்பெஷல்?
‘‘மிக்கி மவுஸ், நாய், பூனைனு குழந்தைங்களுக்குப் பிடிச்ச எந்த உருவத்துலயும் பைகள் பண்ணலாம். பள்ளிக்கூடம் போக அடம்பிடிக்கிற குழந்தைங்க கூட இந்தப் பைகளைக் கொடுத்தா, சமர்த்தா கிளம்பிடுவாங்க. காலேஜ் போறவங்களுக்கு இதுலயே இதய வடிவ மாடல் இருக்கு. தவிர குட்டிக்குட்டி பர்ஸ், பொம்மை வச்ச செல்போன் பவுச் எல்லாமும் பண்ணலாம்.’’
லாபம் மற்றும்
வர்த்தக வாய்ப்பு?
‘‘ஒரு பை தைக்க அதிகபட்சம் 2 மணி நேரம். முழுநேரமும் இதுக்காகவே செலவிட்டா, ஒரு நாளைக்கு 15 பைகள் வரை பண்ணலாம். சின்ன சைஸ் பை செய்ய 75 ரூபாய் செலவாகும். அதை 150 ரூபாய்லேர்ந்து விற்கலாம். செல்போன் பவுச் செய்ய 15 செலவானா, 50 ரூபாய்க்கு விற்கலாம். குழந்தைங்களுக்கு பிறந்த நாளைக்கு அன்பளிப்பா கொடுக்க ஏற்றது. கடைகளுக்கும் சப்ளை பண்ணலாம்.’’
பயிற்சி?
‘‘2 நாள் பயிற்சில 4 மாடல்கள் கத்துக்க 250 ரூபாய் கட்டணம். 1 வாரப் பயிற்சில 20 மாடல்கள் கத்துக்க 1000 ரூபாய் கட்டணம்.’’
RRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR
புதிய பார்வையும் வித்தியாசமான சிந்தனையுமே எந்தத் தொழிலின் வெற்றிக்கும் அடிப்படை. அதை நிரூபித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஹேமா. டெய்லரிங் மட்டுமே செய்து வந்த இவருக்கு, போட்டி நிறைந்த அந்தத் துறையில் பெரிய வருமானம் இல்லை. என்ன செய்தால் ஏற்றம் வரும் என யோசித்த வேளையில் கண்களில் பட்டிருக்கிறது அட்சதை பை. இன்று விதம் விதமான பைகள் தைத்து விற்பதில் எக்கச்சக்க பிஸி ஹேமா.

‘‘பெரிய வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். மணமக்கள் மேல தூவ அட்சதை அரிசி கொடுப்பாங்க இல்லையா? அந்தக் கல்யாணத்துல குட்டிக் குட்டி பை கொடுத்தாங்க. அந்தப் பைக்குள்ள அட்சதை அரிசி, பூ எல்லாம் போட்டிருந்தாங்க. ஒரு அரிசிகூட வீணாகாம, அழகா பேக் பண்ணிருந்தாங்க. அட்சதையை போட்டுட்டு, எல்லாரும் அந்தப் பையை வீட்டுக்கு எடுத்துட்டுப் போறதைப் பார்த்தேன். அதுதான் இன்ஸ்பிரேஷன்.
நவராத்திரிக்கு வீட்டுக்கு வந்தவங்களுக்கு குட்டிக்குட்டியா தாம்பூலப்பை தச்சு, அதுக்குள்ள மஞ்சள், குங்குமம், அன்பளிப்புப் பொருள்களை வச்சுக் கொடுத்தேன். பாராட்டாத ஆளே இல்லை. ஆளாளுக்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பிக்க, அதுவே இன்னிக்கு எனக்கு முழு நேர பிசினஸாயிடுச்சு’’ என்கிற ஹேமா, இந்த வகை பைகள் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
எத்தனை வெரைட்டி?
‘‘அட்சதை போட்டுக்கொடுக்கிற குட்டிப்பை, தாம்பூலப்பை, நகைக் கடைகள்ல நகைகள் போட்டுக் கொடுக்கிற பை, சாக்லெட் போட்டுக் கொடுக்கிற சுருக்குப்பை, அன்பளிப்பு பை, லஞ்ச் பை... இப்படி நிறைய உண்டு.’’
என்னென்ன தேவை? முதலீடு?
‘‘தையல் மெஷின் இருந்தா நல்லது. இல்லாட்டாலும் கையால தைக்கலாம். தேவையைப் பொறுத்து விதம்விதமா சாட்டின், ஜரிகை வச்சது, டிஷ்யூ... இப்படி வெரைட்டியான துணிகள், அலங்காரப் பொருள்கள்... எல்லாம் சேர்த்து 500 ரூபாய் முதலீடு இருந்தா போதும்.’’
விற்பனை வாய்ப்பு மற்றும் லாபம்?
‘‘பையோட அளவையும் மெட்டீரியலையும் பொறுத்து 10&20 ரூபாய்லேர்ந்து 500 ரூபாய் வரைக்கும்கூட விற்கலாம். கல்யாண கான்டிராக்டர்கள்கிட்ட பேசி, அட்சதை பை, தாம்பூலப்பைகளுக்கு மொத்தமா ஆர்டர் எடுக்கலாம். ஸ்கூல் குழந்தைங்களுக்கும் வேலைக்குப் போறவங்களுக்கும் லஞ்ச் பை தச்சுக் கொடுக்கலாம். நவராத்திரி சீசன்ல வெத்தலை, பாக்கு வச்சுக் கொடுக்கிறப்ப, இந்த மாதிரி பைகள்ல அன்பளிப்புகள் போட்டுத் தந்தா நல்லாருக்குங்கிறதால, அந்த சீசன்ல மொத்தமா ஆர்டர் பிடிக்கலாம். பாதிக்குப் பாதி லாபம் நிச்சயம்.’’
பயிற்சி?
‘‘ஒரே நாள் பயிற்சி. கட்டணம் 150 ரூபாய்.’’

-ஹேமா
Contact: 91-44-42209191 Extn:2234

லாபம் அள்ளும் கிரிஸ்டல் கொலுசு!

மாதம், 10 ஆயிரம் லாபமீட்டும், 'கிரிஸ்டல்' கொலுசு தயாரிக்கும் தொழில் பற்றி கூறும், காமாட்சி: நான், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவள். திருமணம் ஆனதும், சென்னை, வேளச்சேரியில் செட்டில் ஆனேன். பட்டதாரியான 
என்னால், வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை.கணவரும், 'ஓய்வு நேரத்தில் ஏதேனும் கற்றுக்கொள்' என, ஊக்கமளித்தார். அதனால், எனக்கு விருப்பமான ஆர்ட் அண்ட் கிராப்ட் கற்றேன். மேலும், வீட்டில் இருந்தபடியே சிறு சிறு கைவினை பொருட்களை செய்து வந்தேன்.பெண்கள் விரும்பி அணியும் நகைகளில், கொலுசும் ஒன்று. ஆனால், அவைகள் பெரும்பாலும் வௌ்ளி கொலுசாகவே கிடைக்கின்றன. குறைந்த விலையில், பல வித வண்ண ஆடைகளுக்கு ஏற்ப, கிரிஸ்டல் கொலுசுகளாக செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், கிரிஸ்டல் கொலுசு செய்ய 
ஆரம்பித்தேன். பெண்களிடம், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், பல டிசைன்களில் கிரிஸ்டல் கொலுசு செய்து, வாடிக்கையாளர்களை கவர்ந்தேன். மிக எளிமையான முறையில், கிரிஸ்டல் கொலுசு செய்யலாம்.கொலுசின் அளவிற்கு ஏற்ப, 'கியர் ஒயரை' வெட்டி, இணைப்பு கொக்கியில் கோர்த்து, கியர் லாக்கை கொண்டு, 'லாக்' செய்ய வேண்டும். பின், கலர் மற்றும் டிசைன்களுக்கு ஏற்ப, அதற்கு தேவைப்படும் கிரிஸ்டல் மணிகளை ஒயரில் கோர்க்க 
வேண்டும்.முழுவதும் கோர்த்து முடித்த பின், இணைப்பு கொக்கியையும், கியர் லாக்கையும் ஒன்றாக சேர்த்த பின், மீதி இருக்கும் ஒயரை வெட்டி விட்டால், விற்பனைக்கு தேவையான கிரிஸ்டல் கொலுசு கிடைக்கும். இதற்கான மூலப்பொருட்கள், பல பேன்சி கடைகளில் கிடைக்கின்றன.ஒரு ஜோடி கொலுசின் ஆரம்ப விலை, 150 ரூபாய். நம் கற்பனை திறனுக்கு ஏற்ப குந்தன் கற்கள், சக்ரி, முத்துக்கள் என, பலவற்றையும் பயன்படுத்தி, அதிக விலைக்கு விற்று லாபமீட்டலாம்.மேலும், வளமான வாடிக்கையாளர் வட்டம் கிடைத்தால், குறைந்தபட்சம் மாதம், 5,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை சாதாரணமாக சம்பாதிக்கலாம். முழுநேரமாக செய்யத் துவங்கினால், இன்னும் அதிக வருமானம் கிடைக்கும். 
தொடர்புக்கு: 99402 67779.

இயற்கை முறையில் இனிப்பான லாபம்... கலக்குது கற்பூரவல்லி.

வலுத்தவனுக்கு வாழை... இளைச்சவனுக்கு எள்ளு’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது, 'வாழைக்கு அதிக பண்டுதம் பார்க்க வேண்டும். அதனால் பண வசதி இருப்பவர்கள் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய முடியும். ஆனால், எள்ளுக்கு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை என்பதால், யார் வேண்டுமானாலும் சாகுபடி செய்யலாம்’ என்பதுதான் இதன் பொருள். ஆனால், இக்கருத்தைப் பொய்யாக்கும் விதமாக, ''இளைத்தவனுக்கும் ஏற்றதாக இருக்கிறது... கற்பூரவல்லி வாழை!’' என்று குஷியோடு சொல்கிறார், விழுப்புரம் மாவட்டம், சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.
உள்ளே வருபவர்களை தலை வணங்கி வரவேற்பு கொடுப்பதுபோல் வாழைத்தார்கள் தொங்கிக் கொண்டிருக்க... பசுமையான அந்த வாழைத் தோட்டத்தில் சுப்ரமணியனைச் சந்தித்தோம்.
கை விட்ட விவசாயம்!
''எங்க குடும்பத்தொழில் விவசாயம்தான். வீட்டுக்கு ஒரே பிள்ளை நான். எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சதுமே, அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். 35 வருஷமா விவசாயம் செஞ்சுட்டிருக்கேன். நெல், கேழ்வரகு, கத்திரி, வெண்டை, கரும்பு, வாழைனு பலவிதமான பயிர்களை சாகுபடி செய்வேன். சமயங்கள்ல விவசாயத்துல செலவு கட்டுபடியாகாமப் போய்... நகை, நட்டையெல்லாம் அடகு வைக்க வேண்டியதாயிடும். இப்படி கஷ்டப்பட்டு செய்தாலும், வர்ற வருமானம், அடகுல இருக்கற நகையை மீட்கறதுக்குகூட உதவாதுங்கறதுதான் நெஜம். அடுத்தடுத்து இப்படியே இருந்ததால... நிரந்தர வருமானத்துக்காக 'பால் உற்பத்தி பண்ணலாம்'கற யோசனையோட... வீட்டுல இருந்த நாட்டு மாடுகளை எல்லாம் வித்துட்டு, கலப்பின மாடுகளை வாங்கினேன். ஆனா... பால்ல கிடைச்ச வருமானம்... மாடுகளுக்கு தீவனம் வாங்கறதுக்கே போதல.
வழிகாட்டிய பசுமை விகடன்!
பிறகு, விவசாயத்துல நல்ல லாபம் தர்ற பயிர்களா தேட ஆரம்பிச்சேன். இதுக்காக நிறைய புத்தகங்கள வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். நண்பர் கொடுத்த தகவலை வெச்சு, நம்மாழ்வார் நடத்தின இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துகிட்டேன். அதுக்கப்பறம், பக்கத்து வீட்டுக்காரர் மூலமா 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல தெரிஞ்சுகிட்ட தொழில்நுட்பங்களை சோதனை செஞ்சு பார்த்தப்போ... நல்ல பலன் கிடைச்சுது. அதுக்கப்பறம்தான் இயற்கை விவசாயத்துல சின்ன நம்பிக்கை வந்துச்சு'' என்று முன்னுரை கொடுத்த சுப்ரமணியன், தொடர்ந்தார்.
நம்பிக்கை கொடுத்த ஜீரோ பட்ஜெட்!
''பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புலயும் கலந்துக்கிட்டேன். பாலேக்கர் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் தான் எனக்கு விவசாயத்து மேல இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்துச்சு. உடனே, ரசாயன உரங்களை நிறுத்திட்டு, முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். முதல் போகத்துல ஒரு ஏக்கர்ல பொன்னி நெல் சாகுபடி செஞ்சேன். 12 மூட்டைதான் (75 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது. தரமில்லாத விதைநெல்லை ஏமாந்து வாங்கிட்டதால, அறுவடை செஞ்ச நெல்லோட நிறம் மங்கலா இருந்துச்சு. அதனால, மார்க்கெட் கமிட்டியில நெல்லை கொள்முதல் செய்யமாட்டேணுட்டாங்க. அப்படியே அரிசியாக்கி விலைக்குக் கொடுத்துட்டேன். நல்ல சுவையாவும், மணமாவும் இருந்ததால... சீக்கிரமே வித்துப்போச்சு.
அப்பறம், தரமான விதைகளை தேடினப்போ... மாப்பிள்ளை சம்பா, பூங்கார் மாதிரியான பாரம்பரிய ரக விதைநெல் கிடைச்சுது. பல தானிய விதைப்பு செய்து, ஜீவாமிர்தம், பழக்கரைசல் மாதிரியான இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி... இந்த ரகங்களை சாகுபடி செஞ்சப்போ, ஏக்கருக்கு 25 மூட்டைக்குக் குறையாம கிடைச்சுது.
புயலுக்குப் பிறகும் மகசூல்!
கிட்டத்தட்ட இதேசமயத்துல... ஜீரோ பட்ஜெட் முறையில ஒரு ஏக்கர்ல கற்பூரவல்லி வாழை போட்டேன். அதுல போட்ட ஊடுபயிர் மூலமா கிடைச்ச வருமானத் துலேயே சாகுபடி செலவை முடிச்சுட்டேன். ஜீரோ பட்ஜெட்ங்கறதால... செலவும் குறைவுதான். வாழை நட்டு நாலு வருஷமாச்சு... மறுதழைவு மூலமாவே பலன் எடுத்துட்டு இருக்கேன். மரங்கள் நல்ல திடமாவே வர்றதால... முட்டு கொடுக்குறதுக்குக்கூட மரம் வெக்கிறதில்லை. 'தானே புயல்’ல எல்லா மரமும் பாதியில முறிஞ்சு போச்சு. அதையெல்லாம் வெட்டிட்டேன். வழக்கமா வாழைத் தோப்புல ஒரே சமயத்துலதான் தார் கிடைக்கும். ஆனா, மரங்களை வெட்டிவிட்டதால... ஒரே மாதிரி இல்லாம வேற வேற சமயங்கள்ல தார் விடுது. அதனால, 15 நாளைக்கு ஒரு முறை பத்து, பதினைஞ்சு தார், அளவுக்குக் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. இதன் மூலமா... வருஷம் முழுக்க வருமானம் கிடைக்குது.
என்கிட்ட மொத்தம் நாலு ஏக்கர் நிலமிருக்கு. ஒரு ஏக்கர் வாழை போக...
70 சென்ட்ல மாப்பிள்ளை சம்பா, 70 சென்ட்ல இலுப்பைப் பூ சம்பா, 70 சென்ட்ல சீரகச் சம்பா, 20 சென்ட்ல பசுந்தீவனம்னு இருக்கு. 70 சென்ட்ல சிறுதானியம் விதைக்கலாம்னு இருக்கேன்'' என்ற சுப்ரமணியன், கற்பூரவல்லி வாழை சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
அது அப்படியே பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 1,000 வாழை!
'கற்பூரவல்லி வாழையின் ஆயுள் காலம் 12 மாதங்கள். நல்ல வடிகால் வசதியோடு கூடிய அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடவு செய்யலாம். ஏக்கருக்கு 8 மாட்டு வண்டி என்ற கணக்கில், எருவைக் கொட்டி களைத்து, மண் பொலபொலப்பாக மாறும் வரை நன்கு உழுது நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, மாட்டு ஏர் மூலமாக, இரண்டு அடி இடைவெளியில் பார் ஓட்டவேண்டும். 8 அடி இடைவெளியில், செடிக்குச் செடி 5 அடி இடைவெளி என்ற அளவில் பார்களில் அரையடி ஆழத்துக்கு குழிகள் எடுக்க வேண்டும் (இடையில் உள்ள பார்களில் ஊடுபயிர் செய்யலாம்). குழியை நான்கு நாட்கள் ஆறப்போட்டு, ஒரு மாத வயதுடைய வாழைக் கன்றை பீஜாமிர்தத்தில் விதை நேர்த்தி செய்து நட வேண்டும். ஏக்கருக்கு சுமார் 1,000 வாழைக் கன்றுகள் வரை நடவு செய்யலாம். வாழைக்கு இடையில் உளுந்து, கத்திரி, தக்காளி, வெண்டை, மிளகாய் போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு பாரிலும் ஒவ்வொரு வகை ஊடுபயிரை நடவு செய்வது நல்லது.
பூச்சி, நோய் தாக்காது!
தாராளமாக தண்ணீர் விட்டு நடவு செய்ய வேண்டும். அடுத்து, நடவு செய்த 3-ம் நாளில் உயிர்தண்ணீர்விட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து தண்ணீர் கட்டினால் போதுமானது. 20-ம் நாள் களை எடுக்க வேண்டும். ஊடுபயிர்கள் வளர்ந்த பிறகு, களை எடுக்க வேண்டியிருக்காது. அறுவடை வரை 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை, பாசன நீரோடு கலந்துவிட வேண்டும். இதேபோல... நடவு செய்த 25-ம் நாளில் இருந்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா என்று மாற்றி மாற்றி தெளிக்க வேண்டும் (ஏக்கருக்கு,
100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் ஜீவாமிர்தம்; 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா என்று கலந்து தெளிக்க வேண்டும்). 3, 6 மற்றும் 9-ம் மாதங்களில் ஒவ்வொரு மரத்துக்கும் அரை கிலோ அளவுக்கு மண்புழு உரம் வைத்து, மண்ணை அணைத்துவிட வேண்டும். இயற்கை முறையில் பூச்சி, நோய் தாக்குதல் குறைவுதான். அப்படியே இருந்தாலும், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
பக்கக் கன்றுகள் ஜாக்கிரதை!
2-ம் மாதத்தில் இருந்து 3-ம் மாதத்துக்குள் ஊடுபயிர்களை அறுவடை செய்து விடலாம். அறுவடை முடிந்த செடிகளை அப்படியே, உழவு ஓட்டி மடித்து விட்டால், அவை உரமாகி விடும். 6-ம் மாதத்தில் வாழையில் பக்கக் கன்றுகள் தோன்றும். அவற்றில் வாளிப்பான ஒரு கன்றை மட்டும் விட்டுவிட்டு, மற்றவற்றைத் தோண்டி எடுத்து, நிலத்தில் ஆங்காங்கே மூடாக்காகப் போட்டுவிட வேண்டும். ஒன்பதாம் மாதத்தில் குலை தள்ள ஆரம்பிக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை... தேவையில்லாத பக்கக்கன்றுகளையும் காய்ந்த சருகுகளையும் கழித்து அவற்றை மூடாக்காகப் போட்டுவர வேண்டும்.
குலை தள்ளிய மூன்று மாதத்தில்... அதாவது, 12-ம் மாதத்துக்குப் பிறகு தார்கள், அறுவடைக்குத் தயாராகிவிடும். அதிகபட்சம் ஒரு மாதத்தில் அறுவடை செய்து விடலாம். தாரை மட்டும் வெட்டிவிட்டு, தாய் மரத்தை அப்படியே விட்டு விட வேண்டும். அதிலுள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு, பக்கக்கன்றுகள் நன்றாக வளரும். தொடர்ந்து, இடுபொருட்களைக் கொடுத்து பாசனம் செய்து வந்தால், அடுத்த 9 மாதங்களில் மீண்டும் பலன் எடுக்கலாம்.
ஏக்கருக்கு 90 ஆயிரம்!
சாகுபடிப் பாடம் முடித்த சுப்ரமணியன், ''ஒரு தார்ல ஏழுல இருந்து பதிமூணு சீப்பு வரை இருக்குது. ஒரு சீப்புல பதினஞ்சுல இருந்து இருபத்திரண்டு காய் வரை இருக்குது. ஒரு ஏக்கர்ல 1,000 வாழை மரம் நட்டா... சேதாரம் போக, குறைஞ்சது 900 தார் வரை கிடைக்கும். ஒரு கற்பூரவல்லி தார், குறைந்தபட்சமா 80 ரூபாய்க்கும், அதிகபட்சமா
150 ரூபாய் வரைக்கும் விக்குது. சராசரியா 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே...
900 வாழை தாருக்கும் சேர்த்து 90 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 20 ஆயிரம் ரூபாய் செலவு போக, 70 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்று மகிழ்ச்சி பொங்க செலவு-வரவு கணக்கைச் சொன்னார்!

தொடர்புக்கு,
சுப்ரமணியன்,
செல்போன்: 97913-79864.

வாழை நார் பிரிக்கும் எந்திரம்


கல்லூரி மாணவர்களின் கலக்கல் கண்டுபிடிப்பு…
கண்டுபிடிப்பு

”கழிவுகளைக் காசாக்கும் வித்தையைத் தெரிஞ்சுக்கிட்டாதான்… நம்ம விவசாயி களும் பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும். அந்த வகையில நம்ம நாட்டுல பெரும்பாலான விவசாயிகள், சாகுபடி செய்யுற வாழையில இருந்து கூடுதல் வருமானம் எடுக்கணும்னுதான் எங்க படிப்பறிவைப் பயன்படுத்தி இந்தக் கருவியைக் கண்டு பிடிச்சுருக்கோம்” என்று பெருமை யுடன் சொல்கிறார்கள், தூத்துக்குடி, அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில் இறுதி யாண்டு இளநிலை இயந்திரவியல் பயிலும் ராம்குமார், ஹரிகுமார், வசந்தகுமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர். இவர்கள் வடிவமைத் திருப்பது… வாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் கருவி!
கல்லூரி தேடிச் சென்ற நம்மிடம் பேசிய ஹரிகுமார், ”இன்ஜினீயரிங் படிப்புல மாணவர்கள் குழுவா சேந்து ஒரு மெஷினை வடிவமைக் கணும். அதுக்கும் மார்க் உண்டு. எங்க ‘டீன்’, ‘மார்க்குக்காக மட்டும் ஏதாவது ஒரு மெஷினை உருவாக்கா தீங்க. சமுதாயத்துக்கும் மக்களுக்கும் தொடர்ந்து பயன்படுற மாதிரியான ஒண்ணை உருவாக்குங்க’னு சொன்னார். விவசாயக் குடும் பத்தைச் சேந்தவங்களான எங்க நாலு பேர் மனசுலயும் அது நல்லா பதிஞ்சுட்டுது. விவசாயியோட கஷ்ட, நஷ்டம் புரிஞ்ச நாங்க… ‘விவசாயிகளுக்கான மெஷின் தயாரிப் போம்’னு முடிவு பண்ணி… விவசாயிகளோட தேவை என்னனு தெரிஞ்சுக்கறதுக்காக நிறைய அலைஞ்சோம். அப்போ உருவானது தான் இந்த மெஷின்!
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்துல வாழை சாகுபடி அதிகமா நடக்குது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில வாழை நார்களுக்கானத் தேவை அதிகமா இருக்கு. எங்க மாவட்டத்துல இருந்து பிளேடு மூலமா நாரைப் பிரிச்சு எடுத்துதான், கன்னியாகுமரிக்கு அனுப்பு றாங்க. அதனால, ‘அதுக்கான மெஷினையே உருவாக்கிடலாம்’னு முடிவு பண்ணிட்டோம். கரன்ட் தட்டுப்பாடு அதிகமா இருக்கறதால கையால இயக்குற மாதிரி இதை வடிவமைச் சோம். இதன் மூலமா பூக்கட்டுறதுக்கு மட்டுமில்ல… புடவை, கைவினைப் பொருட்கள் தயாரிக்கனு வாழையிலிருந்து நார் எடுத்து பயன்படுத்தலாம்” என்றவரைத் தொடர்ந்த ராம்குமார், இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விளக்கினார்.
”நாலு அடி உயர செவ்வக வடிவச் சட்டத்தின் மேல், சுருள் வளைய இணைப் புக்கத்தி கொண்ட தொடர் பற்சக்கரத்தைப் பொருத்தியிருக்கிறோம். இது சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வலது முனையில் சுருள் வளையத்துடன் பிடிப்புக் கத்தி, இருபக்கமும் கூர்மை கொண்ட கத்தி என இரண்டு கத்திகளைப் பொருத்தியிருக் கிறோம். ஒரு மீட்டர் நீளம், இரண்டு அங்குல அகலத்தில் உள்ள வாழை மட்டையை மெஷினில் இரண்டு பிளேடுகளுக்கு கீழ் வைக்கும்போது… எதிர்முனையிலுள்ள காந்தம் கத்திகளின் மறுமுனையைப் பிடித்துக் கொள்ளும். பிறகு, பற்சக்கரத்தை கையால் சுழற்றினால், வாழை மட்டையில் உள்ள ரெசின், பித்து மற்றும் நீர் போன்ற பிசுபிசுப்பு திரவம், வாழை மடலின் நார்க்கழிவு ஆகியவை நீங்கி, சுத்தமான வாழைநார் கிடைத்துவிடும்” என்றார், ராம்குமார்.
”இந்த மெஷினோட அடக்க விலை 4 ஆயிரத்து 500 ரூபாய். நிறைய எண்ணிக்கையில தயாரிக்கும்போது இதுல பாதி பணத்துக்குக் கூட தயாரிக்க முடியும். சராசரியா ஒரு நாளைக்கு ஒரு கிலோ அளவுக்கு நார் பிரிக்க முடியும். வழக்கமா பிளேடு வெச்சு பிரிக்கும்போது முக்கால் கிலோ அளவுக்கு கூடப் பிரிக்க முடியாது. இந்த மெஷினை சீக்கிரமாவும், சுலபமாவும் இயக்க முடியும். பெண்களேகூட இயக்க முடியும். இடம் மாத்துறதும் சுலபம். பாதுகாப்பனதும்கூட” என்று சிலாகித்தார், வசந்தகுமார்.
நிறைவாக, ”இந்த மெஷினுக்காக சிறந்த கண்டுபிடிப்பு சான்றிதழும், 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் எங்களுக்குக் கிடைச்சுருக்கு. நிறைய விவசாயிகள் இதைப் பார்த்துட்டு போறாங்க. அடுத்ததா, ஒரடி ஆழம் வரை ஏர் உழும் கலப்பை; கரும்பு லாரி, டிராக்டர்னு லோடோட கிராமத்து சாலைகள்ல போற வாகனங்கள்… சேறு-சகதியில சிக்கிடாம இருக்கறதுக்காக ரோட்டுல இருக்குற குழியோட ஆழத்தைக் காட்டுற எச்சரிக்கை மணியோட கூடிய ரேடியேட்டர் கருவி… இது ரெண்டையும் உருவாக்கலாம்னு இருக்கோம்” என்று கையை உயர்த்தினர் அந்த நான்கு மாணவர் களும்!

காவல் ஆய்வாளரின் மாதிரிப் பண்ணை!

விவசாயம்' என்றதுமே... 'அதுக்கெல்லாம் ஏக்கர் கணக்குல நிலம், ஆள் பலம், பணம் எல்லாம் இருந்தாத்தான் சாத்தியம்’ என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கும். ஆனால், ஏக்கர் கணக்கில் நிலமோ, பணமோ தேவையில்லை. மனதில் ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருந்தால்... கையகல நிலத்திலும், கலக்கலாக விவசாயம் செய்ய முடியும் என்பதை ஆங்காங்கே நிரூபித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட நம்பிக்கை விவசாயிகளில் ஒருவர், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம், காவல் ஆய்வாளர் இளங்கோவன்.
மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் முப்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, முகையூர். பிரதான சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி, கடற்கரை செல்லும் வழியில் சிறிது தூரம் சென்றால், பனை ஓலையால் வேலியமைக்கப்பட்ட இளங்கோவனின் பண்ணை வரவேற்கிறது.
''எனக்கு பூர்விகம், கடலூர் மாவட்டம், புதுப்பாளையம். எங்கப்பா வேளாண்மை துறையில அதிகாரியா இருந்தவரு. வீட்லயும் விவசாயம் செஞ்சுட்டு இருந்ததால... சின்ன வயசிலிருந்தே விவசாயத்து மேல அதிக ஆர்வம். காவல் துறையில வேல கிடைச்சாலும், விவசாய ஆர்வம்  குறையல. அந்த ஆர்வத்துக்கு, நண்பர் ராஜாமணியோட தொடர்பால, சமீபத்துல விடிவு பொறந்திருக்கு. முதல்ல சின்ன அளவுல செஞ்சு பார்க்கலாம். பிறகு, பெரிய அளவுல இறங்கலாம்னுதான் இந்த 25 சென்ட்ல விவசாயத்தை ஆரம்பிச்சுருக்கோம்'' என்று முன்னுரை கொடுத்த இளங்கோவன், தொடர்ந்தார்.
பலவிதப் பயிர்கள்!
''படிப்பு முடிச்சதும், உரக்கடையில கொஞ்ச நாள் வேலை செஞ்சுட்டு இருந்தேன். அந்த சமயத்துலதான், ரசாயன உரங்களால வர்ற தீமைகளையும் தெரிஞ்சுகிட்டேன். அதனால ஆரம்பத்துல இருந்தே, இயற்கை விவசாயம் பத்தின தேடல் இருந்துச்சு. ராஜாமணி மூலமாதான் 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, விவசாயத்து மேல ஆர்வம் அதிகமாயிடுச்சு. இனியும் தயங்கிகிட்டே இருக்கக்கூடாதுனு சோதனை முயற்சியில இறங்கியாச்சு. இந்த 25 சென்ட்ல சவுக்கு, குமிழ், மா, வாழை, காய்கறிகள், தர்பூசணினு விதவிதமான செடிகளைப் பாக்கும்போது சந்தோஷமா இருக்கு. இது மணற்பாங்கான இடம்கிறதால கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. ஆனா, இந்த மூணு மாசத்துலயே செடிகள்ல நல்லா வேர் புடிச்சிருச்சு. இதுவே பாதி வெற்றிதான். இன்னும் கொஞ்ச நாள்லயே பசுமைக் கட்டிடும்'' என்ற இளங்கோவன், பண்ணையைப் பராமரித்து வரும் ராஜாமணியை நமக்கு அறிமுகப்படுத்தினார்.
நான்கு வரிசையில் பயிர்கள்!
''மரப்பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள்னு அடுக்கு வரிசையில போட்டிருக்கோம். நடுவுல தர்பூசணி இருக்கு. மதுராந்தகம் பக்கத்துல இருக்குற பொலம்பாக்கத்தைச் சேர்ந்த பெரியவர் முத்துமல்லா ரெட்டியாரிடம் இருந்துதான் இந்த தொழில்நுட்பத்தைக் கத்துகிட்டோம். ஒரு சென்ட்ல ரோஜா, முல்லை, திசுவாழைனு இருக்கு. இங்கயே ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் தயாரிக்கிறோம். நாங்க தங்குறதுக்கான ஒரு ஷெட்டும் இருக்கு. தோட்டத்தை சுத்தி பனை ஓலைகளை வெச்சு வேலி அமைச்சு... பக்கத்துல உயிர்வேலியாக நெய்வேலி காட்டாமணக்கை நட்டுட்டோம்.
முதல் வரிசையில ஓரடி அடி இடைவெளியில 150 சவுக்கு இருக்கு. அதுக்கு இடையில பாவக்காய், சுரைக்காய், மிளகாய், கத்திரி, தக்காளி இருக்கு. எதிர் பக்கத்துல 150 சவுக்கும், பத்தடி இடைவெளியில 15 சந்தன கன்னுகளும் நட்டிருக்கோம். சவுக்கு வளந்த பிறகு, நிலத்த சுத்தி வேலி மாதிரி ஆகிடும். ரெண்டாவது வரிசையில மூணடி இடைவெளியில 32 குமிழ் கன்னுகள் இருக்கு. அதுக்கு எதிர் பக்கத்துல பத்து அடி இடைவெளியில நாலு செஞ்சந்தனம் இருக்கு. இதுக்கான இடைவெளியில நாலு தென்னை, வாழை இருக்கு. மூணாவது வரிசையில பத்து அடி இடைவெளியில நாலு மாங்கன்னுகளும், 25 அடி இடைவெளியில 5 தென்னையும்,
5 வாழையும் கலந்து நட்டிருக்கோம். அதுக்கு எதிர்பக்கத்துல 5 அடி இடைவெளியில 22 சந்தனமும், ஒட்டுண்ணிச் செடியா மாதுளையும் நட்டிருக்கோம். நாலாவது வரிசையில 15 அடி இடைவெளியில பலாவும், அதுக்கு இடையில கொய்யாவும் நட்டிருக்கோம். எதிர் பக்கத்துல 8 அடி இடைவெளியில் 15 ரோஸ்வுட்டும், 15 சந்தனம் என 300 மரக்கன்றுகள் இருக்கு. சுத்தியும் மரப்பயிர்கள் போட்டதுக்கு பிறகு, ஒரு அடி இடைவெளியில 260 குழிகள் எடுத்து தர்பூசணி போட்டிருக்கோம்'' என்ற ராஜாமணி பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே தொடர்ந்தார்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் எறும்புகள்!
''ஓரடி ஆழத்துக்கு குழி எடுத்து... வேப்ப மரத்தூள் (மரம் அறுக்கும் ஆலைகளில் கிடைக்கும்), குப்பை உரம் (திடக் கழிவு), எரு இது மூணையும் சம அளவில் கலந்த கலவையில் ஒரு கைப்பிடி அளவு, ஒவ்வொரு குழியிலயும் போட்டு கன்னுகளை நட்டிருக்கோம். சரியா வேர் பிடிக்காத செடிகளைப் பக்கவாட்டுல தோண்டி, வேரோடு எடுத்து வேறொரு இடத்துல வெச்சுடுவோம். அஞ்சு நாளைக்கு ஒரு தடவை, அமுதக் கரைசலையும், 11 நாட்களுக்கு ஒரு தடவை ஜீவாமிர்தத்தையும் கொடுக்கிறோம். அமுதக் கரைசலை செடிகள்ல தெளிக்கிறப்போ, இனிப்புச் சுவைக்கு எறும்புகள் வருது. அந்த எறும்புகள் இலைகளைத் தாக்குற பூச்சிகளோட முட்டைகளை சாப்பிட்டுடுது. தவிர, 15 நாளைக்கு ஒரு தடவை வேப்பங் கொட்டைக் கரைசலையும் தெளிக்கிறோம்'' என்றார்.
பணம் தேவையில்லை...மனம் இருந்தால் போதும்!
மீண்டும் நம் முன் வந்த இளங்கோவன், ''சலுகை விலையிலதான் கன்னுகளை வாங்கினோம். தேங்காய் ஓலையிலயே ஷெட் போட்டுட்டோம். இப்படி எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவு செஞ்சுட்டோம். 2 மாசத்துல தர்பூசணி மூலமாவும், 3 மாசத்துல பூக்கள் மூலமாவும் வருமானம் கிடைக்கலாம். வருமானத்தைவிட, மனசுல ஆர்வம் இருந்தா... சின்ன இடத்துலகூட விவசாயம் செய்ய முடியுங்கிறதுக்கு உதாரணமா ஒரு மாதிரிப் பண்ணையா ஆக்கணும்ங்கிறதுதான் எங்களோட முக்கிய நோக்கம். இதன் மூலமா சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கையை விதைக்க முடியும்... சுற்றுச்சூழலையும் காப் பாத்த முடியும்'' என்று அக்கறை பொங்கச் சொன்னார்!
 தொடர்புக்கு,
வேணு. ராஜாமணி,
செல்போன்: 97904-25912.