Wednesday 2 April 2014

அசத்தல் ஆர்கானிக் பால்... ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லாபம்




10.6.12
உலகத்திலேயே உயர்வானது உழவுத் தொழில்.. வேறெந்தத் தொழிலும் கிடைக்காத ஆத்ம திருப்தி, இதில்தான் கிடைக்கிறது. கட்சி வேலைகளுக்காக மாதத்தில் இருபது நாளைக்கும் மேல் சுற்றுப்பயணத்தில் இருந்தாலும்.. பண்ணைக்கு வந்தவுடனே அத்தனைச் சோர்வும் காணாமல் போய்விடம். இந்தத் தோட்டம்தான் எனக்கான இளைப்பாறும் இடம். என்னைத் தயார்படுத்தும் இடமும் இதுதான் என்று சிலாகித்துச் சொல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் பாரதீய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரும், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவருமான ஹெச. ராஜா. காரைக்குடி அருகே, கண்டனூர் கிராமத்தில் உள்ளது இவரது, ஼லலித் ராஜ் கார்டன்.
இங்கு, இயற்கை விவசாயம் செய்வதோடு, பால் பண்ணை அமைத்து, பாலை நேரடி விற்பனையும் செய்து வருகிறார், ராஜா. எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே.. எங்க குடும்பத்தில் மாடு வளர்த்தாங்க. 1970 களில் எங்க வீட்டில் 25 மாடுகளுக்கும் மேல் இருந்தது. எல்லாமே உள்நாட்டு கலப்பின மாடுகள். அப்ப இருந்தே மாடுகள் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு. அதற்கு பிறகு, ஜெர்சி, சிந்தி கலப்பின மாடுகள் எல்லாம் வந்த பிறகு, நிறையப் பேர் பால் மாடுகளை வளர்க்க ஆரம்பிச்சாங்க. ஆனால், இந்த மாடுகளைப் பராமரிக்கிறது, பெரிய வேலை. அதனால் நாங்க மாடுகளை எல்லாம் விற்றுவிட்டோம்.

வித விதமாக வாழை!
நான் கி.ஏ.முடித்துவிட்டு வந்த பிறகு, மறுபடியும் பால் மாடுகளை வளர்க்கலாம் என்று முடிவு செய்து, இந்த இடத்தை வாங்கினேன். இது மொத்தம் நான்கரை ஏக்கர். இங்க கால் ஏக்கரில் எலக்கி, மட்டி, பூவன், கற்பாரவள்ளி, உதயன், ரஸ்தாளி, செவ்வாழை, நாடு என்று பல வகையான வாழை இருக்கு. விளைவதெல்லாம் வீட்டிற்குத்தான். இரண்டரை ஏக்கரில் கோ – 3, கேரு4, தீவனப்புல் இருக்கு. மீதி இடத்தில் பணியாளர்களுக்கான வீடு, பண்ணை வீடு, மாட்டுக் கொட்டகை, மண்புழு உரக் கொட்டகை எல்லாம் இருக்கு.

நேரடி விற்பனைதான் நல்லது!
இந்த நான்கரை ஏக்கரில் ஒழுங்காக உழைத்தாலே... மாதம் 50 ஆயிரம் ரூபாயை சுலபமாக சம்பாதிக்க முடியும். ஆனால், இன்றைக்கு நிலைமையில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிஙக், கட்டுப்படியான விலை கிடைக்காமல் கஷ்டத்தில்தான் இருக்காங்க. நேரடியாக விற்காமல், சொசைட்டிக்கும், தனியாருக்கும் பால் ஊத்திக்கிட்டு இருந்தால், உழைப்பதற்கான கூலிதான் மிஞ்சும். ஆனால், இதைத்தான் நிறைய பேர் லாபம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய ஆகும் செலவு, வேலை பார்ப்பதற்கான கூலி, இரண்டையும் கூட்டி, பால் விற்கும் விலையில் கழித்து பார்த்தால் உண்மை புரியும். என்றைக்கு நாமாக நேரடியாக விற்பனை செய்கிறோமோ அன்றுதான் உரிய லாபம் கிடைக்கும். இது எல்லாருக்கும் சாத்தியமா என்று சிலர் கேப்பாங்க.. கொஞ்சம் மெனக்கெட்டால் எல்லாருக்கும் இது நிச்சயம் சாத்தியம்தான். கூடுதல் லாபம் கிடைக்கணும் என்றால், கூடுதலாக கொஞ்சம் நேரத்தை செலவு செய்யதான் வேண்டும்.

லிட்டர் 30 ரூபாய்!
இதைப் புரிந்துக் கொண்டதால்தான் நான் நேரடியாக விற்பனையில் இறங்கினேன். பாலை சப்ளை பண்றதுக்காக தனியாக ஆளுங்களை வைத்திருக்கிறேன். பாலில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட ஊற்றாமல், அப்படியே பாக்கெட் போட்டு, லிட்டர் 30 ரூபாய் என்று காரைக்குடியில் வீடுகளுக்கு நேரடியாக கொடுக்கிறோம். அங்க, எங்க பாலுக்கு எப்பவுமே டிமாண்ட்தான்.

5 லட்சம் முதலீடு!
2004 – ம் வருடம் இந்தப் பண்ணையை ஆரம்பித்தேன். ஒரு மாட்டுக்கு 10 அடிக்கு 4 அடி இடம் என்ற  கணக்கில், 64 மாடுகளுக்குத் தேவையான அளவிற்கு, கொட்டகை போட்டிருக்கிறேன். நல்ல காற்றோட்டம் இருக்கும் மாதிரி, தென்னை ஓலையாலதான் கூரை. நான் வாங்கினப் போது, மாடுகளோட விலை மிகவும் குறைவுதான். கொட்டகை, 64 மாடுகள் எல்லாம் சேர்த்து மொத்தம் 5 லட்ச ரூபாய் செலவானது. மாடுகளைப் பராமரிப்பதற்காக இரண்டு குடும்பங்களை வேலைக்கு வைத்திருக்கிறேன். நான் ஊரில் இருந்தால், காலையில் ஆறு மணிக்கெல்லாம் பண்ணைக்கு வந்துவிடுவேன். வெளியூர்  போனாலும், திரும்பி வரும்போது பண்ணைக்கு ஒரு எட்டு வந்துவிட்டுத்தான் வீட்டுக்கே போவேன்.

மாதத்தில் ஒரு நாள் குடும்பத்தோட வந்து பண்ணையில் தங்கிவிடுவோம். எங்க குடும்பத்து ஆளுங்களே எல்லா வேலையும் பார்ப்போம். நான் பால் கறப்பேன். சாணி எடுப்பேன், மாடுகளைக் குளிப்பாட்டுவேன். நாம் ஒரு விஷயத்தை முழுவதாக தெரிந்துக் கொண்டால்தான்.. அதில் நடக்கும் தப்பைக் கண்டுபிடிக்க முடியும். நிறைய பேர் பண்ணையை வைத்துக் காண்டு வெள்ளையும், சொள்ளையுமாக வந்து, போயிட்டு இருப்பாங்க. அங்க கண்டிப்பாக நஷ்டம்தான் வரும். நம்முடைய முழு ஈடுபாடு இல்லாத தொழில், நிச்சயம் ஜெயிக்காது.

13 மாதத்திற்கு ஒரு கன்று!
ஒரு கிலோ தீவனம் கொடுத்தால்.. மாடு இரண்டு லிட்டர் பால் கொடுக்கும் இதுதான் கணக்கு. நான் கம்பெனி தீவனத்தைத்தான் வாங்கிப் போடுறேன். பால் மாட்டுக்கு பசுந்தீவனம், உலர்தீவனம், அடர்தீவனம் என்று எல்லாவற்றையும் குறிப்பிட்ட அளவில் கொடுக்கணும். அப்போதுதான் சீரான பால் உற்பத்தி இருக்கும். நான் ஒரு மாட்டிற்கு 20 கிலோ பசுந்தீவனம் (கோ -4), 5 கிலோ அடர் தீவனம் என்று கொடுக்கிறேன். முறையாக தீவனம் போட்டுப் பராமரித்தால்... 13 மாதத்திற்கு ஒரு கன்று கிடைத்துவிடும்.

ஆண்டுக்கு ஒரு லட்சம் லிட்டர்!
இப்போது பண்ணையில் மொத்தம் 45 மாடுகள் இருக்கு. எல்லாமே ஹெச்.எஃப், ஜெர்சி கலப்பின மாடுகள்தான். ஒரு நாளைக்கு ஒரு மாடு 20 லிட்டர் வரை பால் கொடுக்கிறது. கறவையில்லாத காலத்தையெல்லாம் கழித்துவிட்டு கணக்கு போடும்போது ஒரு மாடு ஒரு வருடத்தில் 2 ஆயிரத்து 520 லிட்டர் பால் கொடுக்கும். எப்பவும் 40 மாடுகள் கறவையில் இருப்பதால்.. வருடத்திற்கு 1 லட்சத்து 800 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. சராசரியாக ஒரு லட்சம் லிட்டர் என்று வைத்துக் கொள்ளலாம். தீவனம், பராமரிப்பு, வேலையாட்கள் கூலி என்று ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய 20 ரூபாய் செலவு. நேரடி விற்பனைக்கான செலவு, லிட்டருக்கு 5 ரூபாய். ஒரு லிட்டர் பால் முப்பது ரூபாய் என்று விற்கும்போது, ஒரு லிட்டருக்கு 5 ரூபாய் லாபம். ஆக, வருடத்திற்கு 5 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது.

மண்புழு உரத்திலும் மகத்தான லாபம்!
இதுபோக, மாதத்திற்கு ஒரு டன் சாணி கிடைக்கிறது. அதை வைத்து மண்புழு உரம் தயார் செய்து கொண்டிருக்கிறேன். எங்க தோட்ட பயன்பாட்டுக்குப் போக மீதியை, கிலோ 6 ரூபாய் என்று விற்கிறேன். அக்கம்பக்கத்து விவசாயிகள், நர்சரி பண்ணை வைத்திருப்பவர்களெல்லாம் வாங்கி கொண்டு போறாங்க. அந்த வகையில் வருடத்திற்கு 10 டன் மண்புழு உரம் விற்பனையாகிறது. தனியாக மெனக்டொமலே கூடுதல் வருமானம் கிடைக்கிறது.என்னைப் பொறுத்தவரைக்கும், 10 பால் மாடுகளைக் குடும்பத்தில் ஒரு ஆள் பராமரித்தாலே போதும். ஒரு குடும்பம் எந்தப் பொருளாதார நெருக்கடியும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும் என்றார்.

தொடர்புக்கு
www.indian-farms.com

No comments:

Post a Comment