Wednesday 2 April 2014

கமகம நறுமணம்.. கலகல வருமானம்!




மூலிகை சாகுபடியில் கலக்கும் சகோதரர்கள். பொதுவாக, பசுமைக் குடில் விவசாயம், மலைப்பகுதி விவசாயம் போன்றவற்றிற்கு இயற்கை  விவசாயம் சரிப்பட்டு வராது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இக்கருத்தைத் தகர்க்கும் விதமாக, நீலகிரி மலைப்பகுதியில் முழு இயற்கை முறையில் மூலிகைகள் மற்றும் நறுமணப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள், சகோதரர்களான பிரவீண்குமார், சிவராமகிருஷ்ணன் ஆகியோர். நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா கிராமத்தைச் சேர்ந்தவர்க்ள, இந்தச் சகோதரர்கள். அக்கிராமத்தின் மலைச்சரிவில் அமைந்திருக்கிறது, இவர்களது தோட்டம். நண்பகல் வேளையொன்றில் தேடிச் சென்றபோது.. தோட்டத்தில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர் சகோதரர்கள் இருவரும்.

விவசாயம் தான் ஆத்மார்த்தமான தொழில்!
எங்க குடும்பத்திற்கு வாழ்வாதாரமே விவசாயம்தான். நாங்க சின்னக் குழந்தைங்களாக இருக்கும் போது, எங்க தாத்தா நந்தி கவுடர் பெள்ளத்தி கிராமத்து மலைச் சரிவிலிருந்த இரண்டரை ஏக்கர் நிலத்தில் தேயிலை வவிசாயம் பண்ணிட்டிருந்தார். அவர் அப்பவே இயற்கை விவசாயம்தான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிலத்தை. கவனிக்க முடியாமப் போயிடுச்சு. நான் பயோ – கெமிஸ்ட்ரி முடித்துவிட்டு சொந்தமாக பிசினஸில் இறங்கினேன். ஆனால், எதுவும் சரிப்பட்டு வரவில்லை. அதனால், விவசாயம் பார்க்கலாம் என்று வந்துவிட்டேன். பரம்பரைத் தொழில் என்பதைவிட எனக்கு விவசாயம்தான் ஆத்மார்த்தமான தொழிலாக தெரிந்தது.

கையைக் கடித்த பால் பண்ணை!
ஆரம்பத்தில் சும்மா கிடந்த தேயிலைத் தோட்டத்தில் பால் பண்ணை வைக்கலாம் என்று யோசனை தோணுச்சு. அந்த இடத்தை சுத்தப் படுத்தி சீமைப்புல், சோளத்தை விதைத்து உறவுக்காரர் ஒருத்தரோட சேர்ந்து பத்து பால் மாடுகளை வாங்கி விட்டேன். ஆரம்பத்தில் இருந்தே, ரசாயனத்தை தொடவே கூடாது என்ற  கொள்கை இருந்ததால்.. தீவனப் பயிர்களுக்கும் தொழுவுரம்தான். நான்கு சிமெண்ட் தொட்டிகளைக் கட்டி, மாட்டுத் தொழுவத்திலிருந்து வரும் மாட்டுச் சிறுநீர், அந்தத் தொட்டிகளுக்கே நேரடியாக வரும் மாதிரி வாய்க்கால் வெட்டினோம். அதில் சாணத்தையும் கொட்டிக் கரைத்து விட்டதால்.. தீவனமெல்லாம் நல்லா செழிப்பாக வந்தது. ஆனால், நாங்க மாடு வாங்கும் போது, சரிவர கவனித்து வாங்கததால், கறவை சரியில்லாமல் போயிடுச்சு. பால் பண்ணைத் தொழில் கையைக் கடிக்கவே, அதை உடனடியாக நிறுத்திவிட்டு, கேரட், கொத்தமல்லி, குடமிளகாய் என்று பயிர் செய்ய ஆரம்பித்துவிட்டோம்.

தொழுவுரம், பஞ்சகவ்யா என்று முழு இயற்கை விவசாயம் செய்ததால்.. நல்ல விளைச்சல் கிடைத்தது. ஆனால், எங்க நிலம் ரிசர்வ் ஃபாரஸ்டுக்குப் பக்கத்தில் இருந்ததால்.. மான், காட்டுமாடு, கரடி என்று வரிசையாக விலங்குகள் வந்து தோட்டத்தை துவம்சம் செய்ய ஆரம்பித்தது. அதையெல்லாம் மீறி, கிடைப்பதைத்தான் விற்பனை செய்துக் கொண்டு இருந்தோம். ஒரு கட்டத்தில் ஒன்றுமே மிஞ்சாத சூழ்நிலை வந்து, வெறுத்துப் போயி காய்கறி சாகுபடியையும் நிறுத்தியாச்சு. ஆனாலும், விவசாயத்தை விட்டு வெளியில் போகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். விலங்குகளால் பிரச்சனை வரக்கூடாது, அதே சமயத்தில் வருமானமும் வரும் மாதிரியான பயிராக இருக்கணும் என்று தேட ஆரம்பித்தேன். அப்போதுதான், ரோஸ்மேரி, தைம், ஸ்வீட் பேசில்.. மாதிரியான நறுமண மூலிகைப் பயிர்கள் பற்றித் தெரிய வந்தது.

இது எல்லாமே, சமையல் பொருட்களாகவும், நறுமணப் பொருட்களாகவும் பயன்படுவதால்.. உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் நல்ல வரவேற்பு இருக்கு என்று தெரிந்து கொண்டேன். அதையெல்லாம் இயற்கையில் சாகுபடி செய்ய முடியும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.
மலைச் சரிவு நிலத்தை டிராக்டர் மாதிரியான இயந்திரங்களை வைத்து உழவு செய்வதெல்லாம் சாத்தியமில்லாத விஷயம். முள் கம்பி மாதிரியான உபகரணங்கள் மூலமாக ஆட்கள் தான் நிலத்தைக் கீறி விடணும். அப்படித்தான் இந்த நிலத்தையும் தயார் செய்து.. நறுமணப் பயிர்களை விதைத்தோம். இங்க தண்ணீர் பிரச்சனையும் கிடையாது.
மலையில் அங்கங்க ஊத்துகள் இருக்கும். எங்க நிலத்திற்கு மேல் சின்டெக்ஸ் தொட்டியை வைத்து ஊத்துத் தண்ணீரை டியூப் மூலமாக கொண்டு வந்து நிரப்பிடுவோம். தொட்டியிலிருந்து பள்ளத்திற்குப் பாயும்போது தண்ணீரோட வேகம் அதிகமாக இருக்கும். ஸ்பிரிங்க்ளர் வைத்து தெளிப்பதற்கும் எங்களுக்கு கரன்ட் தேவையில்லை. புவி ஈர்ப்பு விசை மூலமாகவே தண்ணீரோட பிரஷரில் தானாகவே பாய்ச்சிடுவோம்.
விற்பனையில் பிரச்சனையில்லை
முழு இயற்கை முறையில்தான் சாகுபடி செய்கிறோம். போதுமான அளவிற்கு வருமானம் கிடைத்துவிடுகிறது. ஹோட்டல்களில் சிக்கன், மட்டன் மாதிரியான இறைச்சிகளை சீக்கிரமாக வேக வைப்பதற்காக ரோஸ்மேரி தைம் மாதிரியான இலைகளைப் பயன்படுத்துவாங்க. இதைப் பயன்படுத்தும் போது கறிக்கு நல்ல வாசனையும், சுவையும் கிடைக்கும். அதில்லாமல் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் இந்த இலைகளில் தேநீர் மாதிரியான பானம் தயாரிக்கவும் பயன்படுத்தறாங்க. இதைக் குடிக்கும் போது மன அழுத்தம் விலகுகிறது என்றும் சொல்றாங்க.
சமையலுக்கு மட்டும் இல்லாமல்.. அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கவும் இந்த மாதிரியான நறுமண மூலிகை இலைகளைப் பயன்படுத்துறாங்க. அதனால் இந்தப் பயிர்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. விற்பனையைப் பொறுத்தவரை எங்களுக்குப் பிரச்சனையே கிடையாது. ஊட்டி ஹெர்ப்ஸ் என்று நாங்க ஒரு கம்பெனி ஆரம்பித்திருக்கிறோம். அது மூலமாகவே நாங்க விற்றுவிடுகிறோம்.
ஆனால், தேவையான அளவிற்கு உற்பத்தி இல்லை என்பதுதான் உண்மை. மலைகளில் இருக்கும் இடங்களில் இந்த மாதிரியான பயிர்களை விளைவித்தால்.. நல்ல லாபம் கிடைக்கும் என்பது உறுதி. இப்போது, இந்தப் பயிர்களை சமவெளிப் பகுதிகளிலும் சோதனை அடிப்படையில் விளைவித்துப் பார்த்துக்கிட்டிருக்காங்க. அது வெற்றி அடைந்தால், எல்லா விவசாயிகளும் பயனடைய முடியும்.
ஒரு கிலோ 30 ரூபாய்!
நாங்க 2 ஏக்கரில் ரோஸ்மேரி, 4 ஏக்கரில் தைம், 1 ஏக்கரில் ஒரிகனா, அரை ஏக்கரில் சேஜ், அரை ஏக்கரில் ஸ்வீட் போசில் என்று மொத்தம் எட்டு ஏக்கரில் இந்த நறுமண மூலிகைப் பயிர்களைப் போட்டிருக்கிறோம். இது போக.. வரப்பு ஓரங்களில் லிப்பியா என்ற செடியையும்.. சேஜ் பயிருக்குள்ள ஊடுபயிராக மருகு செடியையும் நடவு செய்திருக்கிறோம்.
இந்த நறுமணப் பயிரிகளைப் பொறுத்த வரை, இலையை மட்டும்தான் அறுவடை செய்யணும். நாங்க பயிரிட்டிருக்கும் செடிகளோட இலைகளை கிலோ 30 ரூபாய் என்று தோட்டத்தில் வந்து வாங்கறாங்க. வெளி மார்க்கெட்டில் இந்த இலைகள் எல்லாம் கிலோ 40 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரைக்கும் விலை போய்க்கிட்டிருக்கு.
ஆண்டுக்கு 100 டன் மகசூல்!
முதல் வருடத்தில் எல்லா பயிர்களும் சேர்த்து.. 32 டன் மகசூல் கிடைத்தது.அதை கிலோ 30 ரூபாய் என்ற கணக்கில் விற்றதில்... 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. அதில் உழவு.. நாத்து, இடுபொருட்கள் எல்லாவற்றிற்குமா சேர்த்து 6 லட்ச ரூபாய் வரைக்கும் செலவானது. அதுபோக, 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் லாபம். இந்த வருஷம் பயிர்களெல்லாம் நல்ல செழிப்பாக வளர்ந்திருக்கு.
இனி, ஒவ்வொரு வருடமும் 100 டன் இலைகளுக்குக் குறையாமல் மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த வகையில் பார்த்தால்.. வருடத்திற்கு 30 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் இடுபொருட்கள், பராமரிப்புச் செலவு போக எப்படியும் எட்டு ஏக்கரிலும் சேர்த்து வருடத்திற்கு 25 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும்.

தொடர்புக்கு
பிரவீண்குமார்,
செல் போன்: 94423-25509.

No comments:

Post a Comment