Wednesday 2 April 2014

சமவெளியிலும் சபாஷ் போடும் சாத்துக்குடி !





முத்தான முயற்சி.. சத்தான வருமானம்!
வேலையாட்கள் தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு, இயற்கைச் சீற்றங்கள்.. எனச் சுற்றியடிக்கும் பல பிரச்னைகளால் விவசாயத்தை விட்டு விலக நினைப்பவர்களுக்குக் கண்டிப்பாக சாத்துக்குடி சாகுபடி கைக் கொடுக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார். திருவண்ணாமலை மாவட்டம், நார்த்தாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கமலநாதன்.
கொத்துகொத்தாக காய்த்துத் தொங்கிய சாத்துக்குடி மரங்களுக்கு இடையில் வேலை செய்து கொண்டிருந்த கமலநாதனை சந்தித்தோம். தாத்தா, அப்பா என்று எல்லோருக்கும் விவசாயம்தான் பூர்வீகத் தொழில். நானும் கல்லூரி படிக்கும்போதே விவசாயத்தையும் கவனிக்க ஆரம்பித்தேன். எம்.ஏ, எம்.எட். முடித்துவிட்டு, 32 வருடமாக வாத்தியாராக வேலை பார்த்து, இப்போது பணி ஓய்வு பெற்றேன்.
மொத்தம் 17 ஏக்கர் நிலமிருக்கு. 5 ஏக்கரில் நெல், 5 ஏக்கரில் மணிலா, 3 ஏக்கரில் கரும்பு, 2 ஏக்கரில் சப்போட்ட என்று இருக்கு. 1 ஏக்கர் 20 சென்டில் சாத்துக்குடி. மீதி 80 சென்ட் நிலத்தை கோழி வளர்ப்பிற்கும் அசோலா வளர்ப்பிற்கும் பயன்படுத்துகிறேன்.
ஆரம்பத்தில் அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் பார்கும்போது, ரசாயன உரங்களைத்தான் போடுவோம். அப்போது அதிக மகசூல் கிடைத்தாலும், போகப் போக குறைந்துவிட்டது. அதன்பிறகு பழையபடி மாட்டு எரு, ஆட்டு எருவையும் பயன்படுத்த ஆரம்பித்தோம். அதனுடன், அசோஸ்பைரில்லம், பாஸ்போ – பாக்டீரியா, சூடோமோனஸ் மாதிரியான இயற்கை உயிரி உரங்களையும் போட ஆரம்பித்ததும் மகசூல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிவிட்டது என்றார்.
சாத்துக்குடி குளிர்ச்சியான இடங்களில் மட்டும்தான் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கங்கம்பட்டு, அரிதாரிமங்கலம் பகுதியில் சாத்துக்குடியை சாகுபடி செய்திருந்தார்கள். அப்ப, நம்முடைய மண்ணிற்கும் வரும் என்று முடிவு செய்து, 95 – ம் வருடம் 1 ஏக்கர் 20 சென்ட் நிலத்தில் மொத்தம் 120 செடிகளை நட்டேன். இதுவும் இயற்கை முறை சாகுபடிதான். வேலையில் இருந்ததால், சரியாக கவனிக்க முடியாமல் போனதில் 40 மரம் காய்ந்து போய்விட்டது. மீதி 80 மரங்களை நன்றாக பராமரிக்க ஆரம்பித்தேன்.
அந்த சமயத்தில் ‘பசுமை விகடனில் ‘ஜீரோ பட்ஜெட்’ கட்டுரையைப் படிக்க ஆரம்பித்ததில் அதில் ஈர்ப்பு வந்தது. திருவண்ணாமலையில் நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டு, பாலேக்கர் சொன்ன முறையில்.. நான்கு சாத்துக்குடி மரங்களுக்கு இடையில் ஒரு வரிசையில் சப்போட்டாவும், ஒரு வரிசையில் நெல்லியும் மாற்றி மாற்றி நடவு செய்தேன். நெல்லி போன வருடத்திலிருந்து காய்க்கிறது. சப்போட்டா இன்னும் காய்ப்புக்கு வரவில்லை

செம்மண் ஏற்றது!
சாத்துக்குடி சாகுபடி செய்ய, தண்ணீர் தேங்காத செம்மண் மற்றும் செம்மண் கலந்த சரலை மண் நிலங்கள் ஏற்றவை. மழைக் காலங்களான ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் நடவு செய்யலாம். இந்தப் பருவத்தில் நடவு செய்தால், நாற்று பழுது இல்லாமல் சிறப்பாக முளைக்கும். சாத்துக்குடி ஒட்டுச்செடிகள் பெங்களூரு, ஆந்திரா எல்லைகளிலும், தமிழ்நாட்டில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்களிலும் கிடைக்கும்.
காய்க்கும் வரை சொட்டுநீர்!
20 அடிக்கு 20 அடி இடைவெளியில் 2 அடி நீள, அகல, ஆழத்தில் குழி எடுத்து 15 நாட்கள் ஆறப்போட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றைக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். நாற்றின் ஒட்டுப்பகுதி தரைக்கு மேல் அரையடி உயரத்தில் இருப்பது போல், நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க... நீளமானக் குச்சியை ஊன்றி செடியுடன் இணைத்துக் கட்ட வேண்டும். மரம் காய்ப்பிற்கு வரும் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சொட்டுநீர்ப் பாசனமும், அதற்குமேல் நேரடியான முறையில் குழாய் பாசனமும் செய்ய வேண்டும். மரத்தில் இடைஞ்சலாக இருக்கும் கிளைகளை, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வெட்டி எடுக்க வேண்டும்.
ஒரு டன் எரு, 300 கிலோ மண்புழு உரம், 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ – பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவை தலா 20 கிலோ இவற்றை ஒன்றாகக் கலந்து, ஆண்டிற்கு ஒரு முறை மழைகாலத்திற்கு முன்பாகக் கொடுக்க வேண்டும். ஐந்து வயது மரங்களுக்கு 3 அடி இடைவெளியிலும், அதற்கு மேல் வயதுள்ள மரங்களுக்கு 5 அடி இடைவெளியிலும் இரண்டடி அகலத்திற்கு வட்டபாத்தி எடுத்து மேற்கண்ட கலவையில் ஒவ்வொரு மரத்திற்கும் 10 கிலோ அளவிற்கு வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாசனத் தண்ணீரோடு 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து விட வேண்டும்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் எறும்புகள்!
10 வயதான சாத்துக்குடி மரங்களுக்கு, இடையில் ஒரு சப்போட்டா அல்லது நெல்லி என ஊடுபயிர் சாகுபடியும் செய்யலாம். நான்கு மரங்களுக்கு இடையில் இதை நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் இடைவெளிப் பகுதியிலும் வருமானம் பார்க்கலாம். செடிகள் வளரும் வரை மட்டும், செடிகளைச் சுற்றியுள்ள களைகளை அகற்ற வேண்டும்.
மரத்தில் சிகப்பு எறும்புகள் இருப்பதால்... வண்ணத்துப்பூச்சித் தாக்குதலைத் தவிர வேறு விதமான பூச்சிகள் தாக்குவதில்லை.(வண்ணத்துப் பூச்சிகளுக்கும் இவர் பூச்சிக்கொல்லி தெளிப்பதில்லை).
மரத்திற்கு 250 கிலோ!
செடி நடவு செய்த 5 –ம் ஆண்டில் பூவெடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். 7 –ம் ஆண்டில் மரத்திற்கு 100 கிலோ அளவிலும், 10 – ம் ஆண்டு முதல் 200 முதல் 250 கிலோ அளவிலும் சாத்துக்குடிப் பழங்கள் கிடைக்கும். பொதுவாக சாத்துக்குடியில் ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் பூ எடுத்து, ஏப்ரல் – மே மாதங்களில் இடைப்பருவ மகசூலும், ஜீன் – ஜீலை மாதங்களில் பூ எடுத்து, செப்டம்பர் – நவம்பர் மாதங்களில் முழுமகசூலும் கிடைக்கும்.
சாத்துகுடியில், இடைப்பருவ மகசூலில் சராசரியாக 2 டன் அளவிற்கு காய் கிடைக்கும். பருவத்தில்  6 டன் அளவிற்கு காய் கிடைக்கும். ஒரு கிலோ 15 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரைக்கும் விற்கிறது. சராசரியாக ஒரு கிலோ 20 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலே.. மொத்தம் 8 டன்னிற்கும் சேர்த்து 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துவிடும்.
வருடத்திற்கு 2 டன் நெல்லி கிடைக்கிறது. அதன் மூலமாக 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. இரண்டிலும் சேர்த்து வருடத்திற்கு மொத்தம் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். செலவு 35 ஆயிரம் ரூபாய் போக, ஒரு லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் லாபம் என்றார்.
தொடர்புக்கு
கமலநாதன், செல்போன் : 98945 – 36616.               
 ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு, 25.10.12 ,www.vikatan.com

No comments:

Post a Comment