Wednesday 2 April 2014

உரம் இல்லை.. செலவு இல்லை.. வரவு உண்டு ..ஊடு பயிரில் அசத்தும் அன்னாசி!




எந்தப் பயிராக இருந்தாலும் சரி அதற்கேற்ற ஊடுபயிரையும் சேர்த்து நடவு செய்தால், கூடுதல் வருமானத்தோடு பிரதான பயிருக்கும் சில நன்மைகள் கிடைத்துவிடும். இதைக் கண்கூடாக உணர்ந்து கொண்ட விவசாயிகள், ஊடுபயிர் சாகுபடிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான பயிராக இருக்கும் ரப்பர் மரங்களுக்கு நடுவே... அமோகமாக அன்னாசி பயிரிடப்படுகிறது. ஒரு காலத்தில் வேலிப்பயிர் என்றே அறியப்பட்டு வந்த அன்னாசியை, இப்போது  தனிப்பயிராகவே பலரும் சாகுபடி செய்து வருகிறார்கள். சத்தான சந்தைத் தேவை இருப்பதை விவசாயிகள் உணர்ந்ததுதான் இதற்கு காரணம்!
மார்த்தாண்டத்தில் இருந்து நாகர் கோவில் செல்லும் சாலையில், மூன்றாவது கிலோ மீட்டரில் இருக்கிறது காஞ்சிரக்கோடு. காணும் இடமெல்லாம் ரப்பர் சாகுபடிதான். இங்கே தன்னுடைய தோட்டத்தில் ‘ரப்பர் பால்’ சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிரேஸ் ராணியிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள உற்சாகமாய் பேசத் தொடங்கினார்.
ஆரம்பத்திலிருந்தே இயற்கை விவசாயம் தான் செய்து கொண்டிருக்கிறேன். குமரி மாவட்ட நஞ்சில்லா வேளாண்மைச் சங்கத்தின் மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கிறேன். பொதுவாக, ரப்பர் சாகுபடிக்கு ரசாயன உரங்களைத்தான் போடுவாங்க. நான்  ரப்பரையும் இயற்கையில்தான் சாகுபடி செய்கிறேன். ஏற்கனவே முந்திரி, மா, பலா என்று மரப்பயிர்களை நடவு செய்திருந்தோம். பசங்களோட படிப்புச் செலவிற்காக கொஞ்ச பூமியை விற்றுவிட்டோம். மீதமிருக்கும் 82 சென்ட் நிலத்தில் ரப்பர் இருக்கு. அதில்தான் ஊடுபயிராக அன்னாசி போட்டிருக்கிறோம்.
ரப்பர் மரங்களுக்கு 18 வயதாகிறது. மொத்தம் 125 மரங்கள் நிற்கிறது. ஒவ்வொரு மரத்திற்கும் பத்தடி இடைவெளி விட்டிருக்கிறேன். நடவு செய்த முதல் மூன்று வருடத்தில் ஊடுபயிராக கத்திரி, வெண்டை, வழுதலங்காய், புடலை என்று காய்கறிகளை சாகுபடி செய்தேன். வளர, வளர ரப்பர் மரத்தோட வேர் மண்ணுக்கு மேல் பகுதிக்கு வந்துவிடும் என்பதால் மேற்கொண்டு காய்கறிகளை ஊடுபயிராக போட முடியாது. அதனால்தான் இப்போது அன்னாசியைப் போட்டிருக்கிறேன். இதிலும் அசத்தலான வருமானம் கிடைக்கிறது.
வாழையைப் போல் பக்கக்கன்றுகள்!
அன்னாசி, மானாவாரி பயிர். இதோட வளர்ச்சிக்கு வெப்பமும், நிழலும் சரிசமமாக இருக்கணும். இதனால் ரப்பருக்கு ஊடுபயிராக போடும் போது.. நல்ல மகசூல் கிடைக்கிறது. இதில் ஒரே விசேஷம்  என்ன வென்றால், இதை ஒரு முறை நட்டாலே போதும்.. வாழை மாதிரி பக்கக் கன்றுகளை விட்டு பரவிடும். தொடக்கத்தில் 200 செடிகளைத்தான் நடவு செய்தேன். அதிலிருந்து பரவி இப்போது ஆயிரத்திற்கும் மேல் அன்னாசிச் செடி இருக்கிறது. மொத்த ரப்பர் மரங்களுக்கும் வருடத்திற்கு ஒரு முறை 200 கிலோ மண்புழு உரம் போடுவேன். தேவைப்பட்டால் மூலிகைப் பூச்சிவிரட்டியும் தெளிப்பேன். அன்னாசிக்கு என்று தனியாக எதையும் போடுவதில்லை. ரப்பருக்கு கொடுக்கும் இடுபொருள் மூலமாகவே அன்னாசியும் வளர்ந்து, நல்ல வருமானத்தைக் கொடுக்கிறது.
செம்மண் ஏற்றது!
அன்னாசியின் ஆயுள் காலம் ஓர் ஆண்டு. செம்மண்ணில் நல்ல மகசூல் கொடுக்கும். தனிப்பயிராக நல்ல மகசூல் நடும்போது ஏக்கருக்கு 10 ஆயிரம் செடிகள் வரை நடவு செய்யலாம். ஊடுபயிராக நடும்போது இருக்கும் இடைவெளியைப் பொறுத்து செடிகளில் எண்ணிக்கை மாறுபடும்.
ஒவ்வொரு செடிக்கும் மூன்றடி இடைவெளி இருக்க வேண்டும். மண்ணை வெறுமனே கையால் தோண்டி, ஒரு கைப்பிடி தொழுவுரத்தைப் போட்டு நடவு செய்ய வேண்டும்.
களை பற்றிய கவலையே இல்லை!
அன்னாசிக்கு நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம் இருப்பதால், நோய்கள் தாக்காது. ஊடுபயிர் என்பதால், அதிகமாக களை எடுக்கும் வேலையும் இருக்காது. முதல் முறை நடவு செய்யும் போது ஓராண்டு முடிவில்தான் மகசூல் கிடைக்கும். அதன் பிறகு பக்கக் கன்றுகள் அதிகமாகி விட்டால், வாரம் தோறும் மகசூல் எடுக்கலாம். ஒரு வாரத்திற்கு குறைந்த பட்சம் 25 காய்கள் என வைத்துக் கொண்டால்…ஓராண்டில் சுமார் 1200 காய்கள் கிடைக்கும். எந்தச் செலவும் இல்லாமல் இந்த மகசூல் கிடைக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எலி, அணில், காகம் ஆகியவற்றால் அன்னாசி கொஞ்சம் சேதமாகும். இதைக் கட்டுப்படுத்த அன்னாசிப் பழம் விளைந்ததும், வாழை நாரைக் (வாழைப் பட்டை) கொண்டு பழத்தைக் கட்டிவிட வேண்டும். இப்படி செய்யும் போது சேதாரம் தடுக்கப்படுவதுடன், காயும் பருமனாக வரும். அன்னாசிப் பழத்தைப் பறித்ததும், செடியைப் பிடுங்கி ரப்பர் மரத்திற்கு உரமாக போட்டுவிடுவேன். காஞ்சிரக் கோட்டில் இயற்கை விவசாயிகள் சோ்ந்து நடத்தும் ‘ஆர்கானிக் பஜார்’ இருக்கு எங்க தோட்டத்தில் விளையும் அன்னாசியை அங்கு கொண்டு போய் விற்றுவிடுவேன். மார்த்தாண்டம் சந்தையில் ஒரு பழத்தை பத்து ரூபாய் என்றுதான் எடுப்பாங்க. ஆர்கானிக் பஜாரில் இருபது ரூபாயிலிருந்து இருபத்தைந்து ரூபாய் வரைக்கும் விலைபோகும்.
ஒரு கன்று 1 ரூபாய் 50 பைசா விலையில் தான் அன்னாசியை வாங்கி நடவு செய்தேன். 200 கன்றிற்கும் சேர்த்து 300 ரூபாய்தான் ஆனது. அது மட்டும்தான் செலவு. இப்போது வாரத்திற்கு 20 பழம் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. குறைந்தபட்சம்.. ஒரு காய் 20 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும்.. வாரத்திற்கு 400 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மாதத்திற்கு 1,200 ரூபாய் என்றார்.
அனைத்துப் பகுதிகளிலும் பயிரிடலாம்!
ஊடுபயிராக அன்னாசி பற்றி பேசிய பேச்சிப்பாறை, கே.வி.கே (வேளாண்மை அறிவியல் நிலையம்), தோட்டக்கலை இணைப் பேராசிரியர் தங்க செல்வபாய், காற்றில் ஈரப்பதமும், சராசரியான வெப்பமும், நல்ல மழையளவும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அன்னாசியைப் பயிரிடலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில்  மட்டுமல்லாமல், மற்ற பகுதிகளிலும் தென்னை மற்றும் பழத் தோட்டங்களில் அன்னாசியை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் அன்னாசி சாகுபடி நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மூன்றாண்டுகள் வரையிலும் அன்னாசியை நடவு செய்யலாம். இருபது வயதிற்கு மேற்பட்ட மரங்கள் உள்ள தென்னந்தோப்புகள் மற்றும் அதிக இடைவெளியல் நடவு செய்யப்பட்டுள்ள பழத் தோட்டங்களிலும் ஊடுபயிராக  அன்னாசியை நடவு செய்யலாம். ஊடுபயிராக  இதை நடவு செய்யும் போது வரிசைக்கு வரிசை இரண்டு அடியும், செடிக்கு செடி ஓரடியும் இடைவெளி விட வேண்டும். புதிதாக நடவு செய்பவர்கள் முதலில் குறைந்த எண்ணிக்கையுடன், சோதனை அடிப்படையில் நடவு செய்து பார்த்துவிட்டு. பிறகு, அதிக பரப்பில் நடவு செய்வது நல்லது என்று ஆலோசனைகளைப் பகிர்ந்தார்.

தொடர்புக்கு
கிரேஸ் ராணி, செல்போன் : 95669 – 43803
தங்க செல்வபாய், தொலைபேசி : 04651 - 281759

No comments:

Post a Comment