Wednesday 2 April 2014

ஊருக்காக வேண்டாம்…நமக்காக வேண்டும்…வியக்க வைக்கும் வீட்டுத் தோட்டம்





அதிக இடம், செழிப்பான தண்ணீர், அதீத உடல் உழைப்பு, இவையெல்லாம் இருந்தால்தான் விவசயாம் சாத்தியம்’ என்பது பொரும்பாலோரின் நினைப்பு, நம்பிக்கை எல்லாம். ஆனால் மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதுபோல் கிடைக்கும் ஒரு துளி இடத்தில் கூட ஒரு செடியை நட்டு வைத்து, வளர்த்தெடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பிரேமலதா அவர்களில் ஒருவர்.
வீட்டைச் சுற்றிலும், பசுமை கொஞ்சிக் கொண்டிருக்க, செடிகளுக்கு வாஞ்சையோடு தண்ணீர் வார்த்துக் கொண்டிருந்த பிரேமலதா, தன் வீட்டுத் தோட்டம் பற்றி பேச ஆரம்பித்தார். மார்த்தாண்டம், நேசமணி நினைவு கிறிஸ்துவ கல்லூரியில் கணிப்பொறித் துறை பேராசிரியராக இருக்கிறார்.  இவருடைய தாய் வீட்டைச் சுற்றிலும் கீரை, கிழங்கு என்று எதையாவது விதைத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார். இவரை பார்த்து இவருக்கும் விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் வந்ததாக கூறுகிறார்.
இவரது கணவர் சர்ச்சில் போதகராக இருப்பதால் அடிக்கடி சபை மாற்றப்பட்டு வீடு மாறிக் கொண்டே இருக்கின்றனர். இந்த வீட்டிற்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. இந்த வீட்டிற்குப் பின்னர் காலி மனை இருப்பதை பார்த்ததும் வீட்டு தோட்ட ஆசை வந்துவிட்டதாக கூறுகிறார். நல்ல செம்மண் இருந்ததால் நல்ல வசதியாக இருந்ததாக சூறுகிளார்.
அழகுக்கு ஆர்கிட், ருசிக்கு திசு வாழை
முன் பகுதியில் செவ்வாழை, குட்டை ரச மோரீஸ் வாழையும், பின் பகுதியில் வெள்ளைத் துளுவன், மட்டி வாழையும் நிற்கிறது. வாழையைப் பொறுத்தவரை முழுக்க இயற்கைதான். இதுபோக ஆர்கிட், அந்தூரியம், ரோஜா என்று வீட்டு முன்பகுதி முழுக்க அலங்காரச் செடிகள் இருக்கிறது. வீட்டுக்கு வருகின்றவர்கள்எல்லோருமே, ரம்மியமாக இருக்கிறது என்று இந்தச் செடியைப் பார்த்து அசந்து போகிறார்கள்.
வீட்டைச் சுற்றி, வல்லாரை, பொன்னாங்கண்ணி, பசலை, தண்டுக்கீரை, சிவப்புக் கீரை, அகத்திக்கீரை என்று எல்லா வகைக் கீரைகளும் இருக்கிறது. ஒவ்வொரு வகையான கீரையை சமையலில் சேர்த்துக் கொள்வதாக கூறுகிறார்.
இரக இரகமாக காய்கறிகள்
புதர் மிளகு, வெண்டை, தக்காளி, கேரட், பீன்ஸ், வழுதலை, கத்தரி. அவரை, பூசணி என பல வகை காய் கறிகள் ஈருக்கிறது. மரவள்ளிக் கிழுங்கு, கூவைக் கிழங்கு, சிறு கிழங்கு, சேனைக்கிழங்கு, காய்ச்சில் கிழங்கு என்று கிழங்கு வகைகளும் நிறைய இருக்கிறது. வீட்டில் வருகிற கழிவு நீரையே செடிகளுக்கு கொடுப்பதாக கூறிய அவர் தோட்டம் அமைக்கும் முறைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பல பயிர் முறை
முறையாக வீட்டுத் தோட்டம் அமைத்தால், வருடம் முழுவதும் மகசூல் பார்க்கலாம். ஓரே மாதிரியான காய்கறிகளை வரிசையாக நடாமல், வேறு பயிர்களையும் கலந்து நட வேண்டும். செடிக்குச் செடி ஒரு அடி இடைவெளி இருக்க வேண்டும். இதனால் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
அரை அடிகக்குத் தோண்டி கால் கிலோ தொழுவுரம் போட்டுச் செடிகளை நட வேண்டும். எந்தக் காய்கறியாக இருந்தாலும், பராமரிப்பு ஒன்று தான். தொழுவுரம், கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, எலும்புத்தூள் எல்லாவற்றையும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு செடிக்கும் இந்தக் கலவையில் ஒரு பிடி அளவுக்கு தூவ வேண்டும். பலவீனமாக இருக்கும் செடிகளுக்குக் கூடுதலாக கொடுக்கலாம்.
வெயில் நேரங்களில்தண்ணீர் விடக் கூடாது. செடியின் அடி பாகத்தில் தேங்காய் மட்டையை அடுக்கி வைத்து தண்ணீர் ஊற்றினால் நிறைய நேரம் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள் வராது. அப்படியே வந்தாலும், வேப்பெண்ணெய், காதி சோப் கரைசலைத் தெளித்தால் போய்விடும். செடிகள், காய்கறிக் கழிவுகளை செடிகளுக்கு மூடாக்காக போட்டு வைத்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்கிறார் பிரேமலதா.

No comments:

Post a Comment