Showing posts with label indian-farms. Show all posts
Showing posts with label indian-farms. Show all posts

Friday, 7 February 2014

காவல் ஆய்வாளரின் மாதிரிப் பண்ணை!

விவசாயம்' என்றதுமே... 'அதுக்கெல்லாம் ஏக்கர் கணக்குல நிலம், ஆள் பலம், பணம் எல்லாம் இருந்தாத்தான் சாத்தியம்’ என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கும். ஆனால், ஏக்கர் கணக்கில் நிலமோ, பணமோ தேவையில்லை. மனதில் ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருந்தால்... கையகல நிலத்திலும், கலக்கலாக விவசாயம் செய்ய முடியும் என்பதை ஆங்காங்கே நிரூபித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட நம்பிக்கை விவசாயிகளில் ஒருவர், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம், காவல் ஆய்வாளர் இளங்கோவன்.
மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் முப்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, முகையூர். பிரதான சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி, கடற்கரை செல்லும் வழியில் சிறிது தூரம் சென்றால், பனை ஓலையால் வேலியமைக்கப்பட்ட இளங்கோவனின் பண்ணை வரவேற்கிறது.
''எனக்கு பூர்விகம், கடலூர் மாவட்டம், புதுப்பாளையம். எங்கப்பா வேளாண்மை துறையில அதிகாரியா இருந்தவரு. வீட்லயும் விவசாயம் செஞ்சுட்டு இருந்ததால... சின்ன வயசிலிருந்தே விவசாயத்து மேல அதிக ஆர்வம். காவல் துறையில வேல கிடைச்சாலும், விவசாய ஆர்வம்  குறையல. அந்த ஆர்வத்துக்கு, நண்பர் ராஜாமணியோட தொடர்பால, சமீபத்துல விடிவு பொறந்திருக்கு. முதல்ல சின்ன அளவுல செஞ்சு பார்க்கலாம். பிறகு, பெரிய அளவுல இறங்கலாம்னுதான் இந்த 25 சென்ட்ல விவசாயத்தை ஆரம்பிச்சுருக்கோம்'' என்று முன்னுரை கொடுத்த இளங்கோவன், தொடர்ந்தார்.
பலவிதப் பயிர்கள்!
''படிப்பு முடிச்சதும், உரக்கடையில கொஞ்ச நாள் வேலை செஞ்சுட்டு இருந்தேன். அந்த சமயத்துலதான், ரசாயன உரங்களால வர்ற தீமைகளையும் தெரிஞ்சுகிட்டேன். அதனால ஆரம்பத்துல இருந்தே, இயற்கை விவசாயம் பத்தின தேடல் இருந்துச்சு. ராஜாமணி மூலமாதான் 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, விவசாயத்து மேல ஆர்வம் அதிகமாயிடுச்சு. இனியும் தயங்கிகிட்டே இருக்கக்கூடாதுனு சோதனை முயற்சியில இறங்கியாச்சு. இந்த 25 சென்ட்ல சவுக்கு, குமிழ், மா, வாழை, காய்கறிகள், தர்பூசணினு விதவிதமான செடிகளைப் பாக்கும்போது சந்தோஷமா இருக்கு. இது மணற்பாங்கான இடம்கிறதால கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. ஆனா, இந்த மூணு மாசத்துலயே செடிகள்ல நல்லா வேர் புடிச்சிருச்சு. இதுவே பாதி வெற்றிதான். இன்னும் கொஞ்ச நாள்லயே பசுமைக் கட்டிடும்'' என்ற இளங்கோவன், பண்ணையைப் பராமரித்து வரும் ராஜாமணியை நமக்கு அறிமுகப்படுத்தினார்.
நான்கு வரிசையில் பயிர்கள்!
''மரப்பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள்னு அடுக்கு வரிசையில போட்டிருக்கோம். நடுவுல தர்பூசணி இருக்கு. மதுராந்தகம் பக்கத்துல இருக்குற பொலம்பாக்கத்தைச் சேர்ந்த பெரியவர் முத்துமல்லா ரெட்டியாரிடம் இருந்துதான் இந்த தொழில்நுட்பத்தைக் கத்துகிட்டோம். ஒரு சென்ட்ல ரோஜா, முல்லை, திசுவாழைனு இருக்கு. இங்கயே ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் தயாரிக்கிறோம். நாங்க தங்குறதுக்கான ஒரு ஷெட்டும் இருக்கு. தோட்டத்தை சுத்தி பனை ஓலைகளை வெச்சு வேலி அமைச்சு... பக்கத்துல உயிர்வேலியாக நெய்வேலி காட்டாமணக்கை நட்டுட்டோம்.
முதல் வரிசையில ஓரடி அடி இடைவெளியில 150 சவுக்கு இருக்கு. அதுக்கு இடையில பாவக்காய், சுரைக்காய், மிளகாய், கத்திரி, தக்காளி இருக்கு. எதிர் பக்கத்துல 150 சவுக்கும், பத்தடி இடைவெளியில 15 சந்தன கன்னுகளும் நட்டிருக்கோம். சவுக்கு வளந்த பிறகு, நிலத்த சுத்தி வேலி மாதிரி ஆகிடும். ரெண்டாவது வரிசையில மூணடி இடைவெளியில 32 குமிழ் கன்னுகள் இருக்கு. அதுக்கு எதிர் பக்கத்துல பத்து அடி இடைவெளியில நாலு செஞ்சந்தனம் இருக்கு. இதுக்கான இடைவெளியில நாலு தென்னை, வாழை இருக்கு. மூணாவது வரிசையில பத்து அடி இடைவெளியில நாலு மாங்கன்னுகளும், 25 அடி இடைவெளியில 5 தென்னையும்,
5 வாழையும் கலந்து நட்டிருக்கோம். அதுக்கு எதிர்பக்கத்துல 5 அடி இடைவெளியில 22 சந்தனமும், ஒட்டுண்ணிச் செடியா மாதுளையும் நட்டிருக்கோம். நாலாவது வரிசையில 15 அடி இடைவெளியில பலாவும், அதுக்கு இடையில கொய்யாவும் நட்டிருக்கோம். எதிர் பக்கத்துல 8 அடி இடைவெளியில் 15 ரோஸ்வுட்டும், 15 சந்தனம் என 300 மரக்கன்றுகள் இருக்கு. சுத்தியும் மரப்பயிர்கள் போட்டதுக்கு பிறகு, ஒரு அடி இடைவெளியில 260 குழிகள் எடுத்து தர்பூசணி போட்டிருக்கோம்'' என்ற ராஜாமணி பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே தொடர்ந்தார்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் எறும்புகள்!
''ஓரடி ஆழத்துக்கு குழி எடுத்து... வேப்ப மரத்தூள் (மரம் அறுக்கும் ஆலைகளில் கிடைக்கும்), குப்பை உரம் (திடக் கழிவு), எரு இது மூணையும் சம அளவில் கலந்த கலவையில் ஒரு கைப்பிடி அளவு, ஒவ்வொரு குழியிலயும் போட்டு கன்னுகளை நட்டிருக்கோம். சரியா வேர் பிடிக்காத செடிகளைப் பக்கவாட்டுல தோண்டி, வேரோடு எடுத்து வேறொரு இடத்துல வெச்சுடுவோம். அஞ்சு நாளைக்கு ஒரு தடவை, அமுதக் கரைசலையும், 11 நாட்களுக்கு ஒரு தடவை ஜீவாமிர்தத்தையும் கொடுக்கிறோம். அமுதக் கரைசலை செடிகள்ல தெளிக்கிறப்போ, இனிப்புச் சுவைக்கு எறும்புகள் வருது. அந்த எறும்புகள் இலைகளைத் தாக்குற பூச்சிகளோட முட்டைகளை சாப்பிட்டுடுது. தவிர, 15 நாளைக்கு ஒரு தடவை வேப்பங் கொட்டைக் கரைசலையும் தெளிக்கிறோம்'' என்றார்.
பணம் தேவையில்லை...மனம் இருந்தால் போதும்!
மீண்டும் நம் முன் வந்த இளங்கோவன், ''சலுகை விலையிலதான் கன்னுகளை வாங்கினோம். தேங்காய் ஓலையிலயே ஷெட் போட்டுட்டோம். இப்படி எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவு செஞ்சுட்டோம். 2 மாசத்துல தர்பூசணி மூலமாவும், 3 மாசத்துல பூக்கள் மூலமாவும் வருமானம் கிடைக்கலாம். வருமானத்தைவிட, மனசுல ஆர்வம் இருந்தா... சின்ன இடத்துலகூட விவசாயம் செய்ய முடியுங்கிறதுக்கு உதாரணமா ஒரு மாதிரிப் பண்ணையா ஆக்கணும்ங்கிறதுதான் எங்களோட முக்கிய நோக்கம். இதன் மூலமா சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கையை விதைக்க முடியும்... சுற்றுச்சூழலையும் காப் பாத்த முடியும்'' என்று அக்கறை பொங்கச் சொன்னார்!
 தொடர்புக்கு,
வேணு. ராஜாமணி,
செல்போன்: 97904-25912.

உற்சாக வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்!

புல், பூண்டு, செடிகள், கொடிகள், மரங்கள், புழுக்கள், பூச்சிகள், விலங்குகள்... எனப் பல்லுயிர்கள் அடங்கியதுதான் கானகம். இவையெல்லாம் இல்லாமல், வெறும் மரங்கள் மட்டுமே இருந்தால்... அது கானகமாக இருக்க முடியாது. அதேபோலத்தான் விவசாயமும்... ஒரே பயிர் வெள்ளாமை மட்டுமல்ல விவசாயம். பலவிதமானப் பயிர்கள் கால்நடைகள், மீன்கள்... என அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒன்றின் கழிவை மற்றொன்றுக்கு உணவாகக் கொடுத்து, குறைந்த செலவில் அதிக லாபம் பார்ப்பதுதான் நமது பாரம்பரிய விவசாயம். இத்தகைய 'ஒருங்கிணைந்தப் பண்ணையம்’தான்... விவசாயிகளை என்றென்றைக்கும் வாழவைக்கும்''
-இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், 'ஜீரோ பட்ஜெட் பிதாமகன்' சுபாஷ் பாலேக்கர்... போன்ற வேளாண் ஆர்வலர்களும், விவசாயப் பொருளியல் நிபுணர்களும் இப்படித்தான் வலியுறுத்திக் கொண்டுள்ளனர்.
பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த, 'ஒருங்கிணைந்தப் பண்ணையம்' எனும் இந்தக் கோட்பாடு, இடையில் பசுமைப் புரட்சி காரணமாக கரைய ஆரம்பித்தாலும்... தற்போது மீண்டும் வேரூன்ற ஆரம்பித்துள்ளது. இதன் மூலமாக லாபம் பார்க்கும் விவசாயிகள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சிவிக்காடு-அத்திவெட்டி கிராமத்தைச் சேர்ந்த வைரக்கண்ணு.
''சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துலயும் கால்நடை வளர்ப்புலயும் அதிக ஆர்வம். பத்தாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு விவசாயத்தைப் பாக்க வந்துட்டேன். கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு அனுபவங்களை ஏற்படுத்திக்கிட்டு... சம்பாதிச்சதுலதான் இப்போ, எட்டு ஏக்கர்ல ஒருங்கிணைந்தப் பண்ணையத்தை உருவாக்கி இருக்குறேன். ரெண்டு ஏக்கர்ல தென்னை, ரெண்டு ஏக்கர்ல கோ-4, ஒரு ஏக்கர்ல தீவனச் சோளம் இருக்கு. மூணு ஏக்கர்ல வழக்கமா இரு போகம் நெல் போடுவேன். அதே நிலத்துல கோடையில ஒரு போகம் சோளம், நிலக்கடலை, எள்ளு, உளுந்துனு போட்டு எடுத்துடுவேன்.
தென்னந்தோப்புக்கு உள்ளயே தனித்தனியா கொட்டகை போட்டு, அதுல 500 நாட்டுக்கோழி, 15 ஆடு, 50 ஜோடிப் புறா, 10 முயல், 9 மாடுங்கனு வளர்த்துட்டு இருக்கேன். இதில்லாம, 15 வாத்துகளும் இருக்கு. வேலி ஓரத்துல சூபாபுல், கிளரிசீடியா, கல்யாணமுருங்கை, வேம்பு, ஒதியன், நுணா மரங்கள் இருக்கு. பக்கத்துல இருக்குற பஞ்சாயத்துக்குச் சொந்தமான ரெண்டு குளத்தைக் குத்தகைக்கு எடுத்து, மீன் வளர்த்துட்டு இருக்கேன்'' என்று தன்னுடைய ஒருங்கிணைந்தப் பண்ணை பற்றிய முன்னுரையைக் கொடுத்த வைரக்கண்ணு, பண்ணையைச் சுற்றிக் காட்டியபடியே ஒவ்வொன்றாக விளக்க ஆரம்பித்தார்.
களை எடுக்கும் கால்நடைகள்!
''தென்னந்தோப்புல மரங்களுக்கு இடையில களைகளை எடுக்கறதுக்காக உழவெல்லாம் ஓட்டுறதில்லை. தண்ணியையும் தாராளமா கொடுக்கறதில்லை. பத்து நாளைக்கு ஒரு தடவைனு காய்ச்சலும் பாய்ச்சலுமாத்தான் தண்ணி பாய்ச்சுவேன். இப்படிச் செய்றதால... தென்னையோட சல்லி வேர்கள் அழுகாம இருக்கும். மண்ணும் இறுகாம இருக்கும். களைகள், புல் பூண்டுகளை... கோழி, வாத்து, ஆடு, மாடுகள் சாப்பிட்டுடும். இந்தச் செடிகளை அறுத்து, முயலுக்கும் கொடுப்போம். ஆடு, மாடுகள் மேயுறதால, அதுகளோட கழிவுகள் தோப்புல விழுந்து, மண் நல்ல வளமா இருக்கு. ஏகப்பட்ட மண்புழுக்களும் இருக்கு. அதனால, தென்னைக்கு எந்த ஊட்டமும் கொடுக்காமலே செழிப்பா இருக்கு. 
 
கழிவிலிருந்து உரம்!
கால்நடைக் கழிவுகள், இலை தழைகள் எல்லாத்தையும் வெச்சு, வருஷத்துக்கு 3 டன் மண்புழு உரம் தயாரிக்குறோம். ரொம்ப வருஷமா ஒரு தென்னை மரம் சரியா காய்க்காம இருந்துச்சு. அதை வெட்டிடலாமானுகூட யோசிச்சுட்டு இருந்தோம். அந்த சமயத்துல யதார்த்தமா அந்த மரத்துக்குப் பக்கத்துல மண்புழு உரம் தயாரிக்க படுகை போட்டோம். கொஞ்ச நாள்லயே அந்த மரம் அருமையா காய்க்க ஆரம்பிச்சுடுச்சு. அதனால, இங்க வெள்ளாமை வைக்கிற எல்லா பயிர்களுக்கும் இதைத்தான் உரமா போடுறோம். அதோட பஞ்சகவயாவையும் தெளிச்சு விடுவோம். வேற எந்த ஊட்டத்தையும் பயன்படுத்துறதில்லை.
செலவைக் குறைக்கும் மாட்டு வண்டி!
ரெண்டு வண்டி மாடுகள், ஏழு கலப்பினப் பசுக்கள் இருக்கு. சூபாபுல், தீவனச் சோளம், கிளரிசீடியா, கோ-4, சோளத்தட்டை எல்லாத்தையும் கலந்து, ஒரு மாட்டுக்கு தினமும்
7 கிலோ அளவுக்கு பசுந்தீவனம் கொடுக்குறோம். வண்டி மாடு இருக்குறதால போக்குவரத்துச் செலவும் அதிகமா இருக்கறதில்லை. எப்பவும் 3 மாடு கறவையில இருக்கும். தினமும்
20 லிட்டருக்குக் குறையாம பால் கிடைக்குது'' என்ற வைரக்கண்ணு, கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்றார்.
மேய்ச்சல் முறையில் நாட்டுக் கோழிகள்!
''தாய்க்கோழியா 90 பெட்டைகள், 10 சேவல்கள் இருக்கு. இதில்லாம, வெளியில இருந்து வாங்கின 400 நாட்டுக் கோழிக்குஞ்சுகளும் இருக்கு. ஒருநாள் வயசுள்ள குஞ்சுகளை வாங்கிட்டு வந்து, மூணு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம். குஞ்சுகளுக்கு ஒரு மாசம் வரைக்கும் கம்பெனி தீவனம் வாங்கிப் போடுவோம். அதுக்கப்பறம், நாங்களே தயாரிக்குற தீவனத்தைக் கொடுத்துடுவோம். ஒருநாள் வயசுல இருந்து மூணு மாசம் வரைக்கும் ஒரு கோழிக்கு ரெண்டரை கிலோ தீவனம் கொடுக்க வேண்டியிருக்கும். வருஷத்துக்கு இதுமாதிரி 1,400 குஞ்சுகளை வளர்த்து வித்துட்டு இருக்கேன். எங்ககிட்ட இருக்குற கோழிகள் மூலமா கிடைக்கிற குஞ்சுகளையும் இதேபோல வளர்த்து விற்பனை செய்றோம். நாட்டுக்கோழி முட்டைகளையும் தனியா விற்பனை செய்றோம். கோழிகள் இங்கேயே மேய்ஞ்சுடும். இருந்தாலும், தினமும் அரிசி, குருணை, தவிடு எல்லாத்தையும் கலந்து போடுவோம். அப்பதான் நாம கூப்பிட்டா கோழிகள் ஓடி வரும்'' என்று சொல்லிக்கொண்டே... தீவனத்தை அள்ளி வீசிய வைரக்கண்ணு ஆடு, முயல், வாத்து ஆகிய வற்றைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
பரணில் ஆடுகள்... கூண்டில் முயல்கள்!
''ஜமுனாபாரி ரகத்துல 2 கிடாவும், 6 பெட்டையும் இருக்கு. நாட்டு ஆடுகள்ல 3 பெட்டையும், 4 குட்டிகளும் இருக்கு. நாட்டு ஆடுகளோட, ஜமுனாபாரி கிடாவை இனச்சேர்க்கை செய்யும்போது தரமான குட்டிங்க கிடைக்குது. ஜமுனாபாரி ஆடுகளை பரண் அமைச்சு வளர்க்குறோம். ஆடுகளுக்கு எங்க தோட்டத்துல கிடைக்கிற பசுந்தீவனத்தையே கொடுத்துடுவோம். ஆடுகள் மூலமா கிடைக்கிற குட்டிகளை, எட்டு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம். ஜமுனாபாரி ஆடுகளை நாட்டு ஆடுகளோடு கலக்காம விற்பனை செய்றதால... நல்ல விலை கிடைக்குது.
கூண்டு முறையில 8 பெட்டை முயல் களையும், 2 ஆண் முயல்களையும் வளர்க் கிறோம். இங்க விளையுற பசுந்தீவனங்களைத் தான் முயல்களுக்கு  கொடுக்கிறோம். ஒவ்வொரு முறையும் குட்டி போட்டதும் ஆணோட சேர விடாம ஒரு மாசத்துக்கு பெட்டைகளைப் பிரிச்சு வெச்சுடுவோம். அப்பதான் முயல்கள் ஆரோக்கியமா இருக்கும். வருஷத்துக்கு மொத்தமா 240 குட்டிகள் கிடைக்குது. இதை மூணு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம்.
வாத்துகள்ல 3 ஆண், 12 பெண் இருக்கு. ஒரு வாத்து, வருஷத்துக்கு 270 முட்டைகள் இடும். உடைஞ்சு சேதாரமானது போக, இதுல 200 முட்டைகள் தேறும். அப்படி பார்த்தா... வருஷத்துக்கு 2 ஆயிரத்து 400 முட்டைகள் கிடைக்குது. ஒரு முட்டை 5 ரூபாய்னு விற்பனை செஞ்சுடுவோம். பகல் நேரங்கள்ல வாத்துகளை மீன் குளத்துல விட்டுட்டா... பாசி, புழுக்களை எல்லாம் சாப்பிட்டுடும். வாத்தோட கழிவுகள், மீன்களுக்கு உணவாகிடும். வாத்துக்கும், முயலுக்கும் எங்களுக்கு தீவனச் செலவே கிடையாது. அதனால, இந்த ரெண்டு மூலமா கிடைக்கிறது எல்லாமே லாபம்தான்!
நாட்டுப் புறாவுல 50 ஜோடி இருக்கு. இது மூலமா வருஷத்துக்கு 1,000 குஞ்சுகள் கிடைக்கும். இதுல 800 குஞ்சுகள் தேறும். இதையெல்லாம் மூணு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம். புறாக் களுக்கு பொட்டுக்கடலை, கம்பு, பச்சைப் பயறு எல்லாம் கலந்து தீவனமா கொடுப் போம்'' என்ற வைரக்கண்ணு, அடுத்து போய் நின்றது... மீன்குளத்தில்!
''ஒரு ஏக்கர் பரப்புல ஒண்ணு, ரெண்டு ஏக்கர் பரப்புல ஒண்ணுனு மொத்தம் ரெண்டு குளம் இருக்கு. பிறந்து ஒருநாள் ஆன, 1 லட்சம் மீன்குஞ்சுகள வாங்கிட்டு வந்து, ஒரு குட்டையில விட்டு 2 மாசம் வளர்க்கணும். விரல் அளவுக்கு வளந்ததும், அதுகள குளத்துல விட்டுடுவோம். 1 லட்சம் குஞ்சுகளுக்கும் சேர்த்து, 15 நாள் வரைக்கும் தினமும் அரை கிலோ கடலைப் பிண்ணாக்கை தீவனமா கொடுப்போம். அடுத்த 45 நாளைக்கு, தினமும் ஒரு கிலோ கடலைப் பிண்ணாக்கு, ஒரு கிலோ எண்ணெய் எடுத்த தவிடு ரெண்டையும் கலந்து போடுவோம். ரெண்டு மாசம் கழிச்சு பார்த்தா... 20 ஆயிரம் குஞ்சுகள் தேறும். இதுல 9 ஆயிரம் குஞ்சுகளை மட்டும் மூணு ஏக்கர் குளத்துலயும் விட்டுட்டு, மீதியை விற்பனை செஞ்சுடுவோம்.
குளத்துல வளர்ற குஞ்சுகளுக்கு சோயா மாவு, கோதுமை மாவு, சோள மாவு, கடலை மாவு எல்லாத்தையும் கலந்து களி மாதிரி வேகவெச்சு தீவனமா கொடுப்போம். ஒரு ஏக்கர் குளத்துக்கு முதல் ஒரு மாசத்துல தினம் ஒரு கிலோ; 2-ம் மாசம் தினம் 2 கிலோ; 3-ம் மாசம் தினம் 3 கிலோனு தீவனம் கொடுக்கணும். 4-ம் மாசத்துல இருந்து 8-ம் மாசம் வரைக்கும் தினம் 4 கிலோ அளவுக்கு தீவனம் கொடுப்போம். தீவனத்தை நைலான் சாக்குல, மூட்டையா கட்டி, அதுல மூணு துளை போட்டு, தண்ணீரோட மேற்பரப்புல இருக்குற மாதிரி தொங்க விட்டுடுவோம். கூடவே, தினமும் 2 கிலோ கோழி எச்சத் தையும் சாக்குல கட்டி தொங்க விடுவோம்.
எட்டு மாசம் கழிச்சு, தவளை, ஆமை இதெல்லாம் பிடிச்சு சாப்பிட்டது... தானாகவே செத்துப் போனது... வளர்ச்சி அடையாததுனு மீன்குஞ்சுகள்ல இழப்பு வரும். இதெல்லாம் போக, 3 ஏக்கர் குளத்துக்கும் சேர்த்து மொத்தமா 5 ஆயிரம் மீன்கள் கிடைக்கும். ஒரு மீன் முக்கால் கிலோவுல இருந்து ஒண்ணேகால் கிலோ வரை எடை இருக்கும். எடை கணக்குல சராசரியா 5 ஆயிரம் கிலோ அளவுக்கு மீன்கள் கிடைக்கும். வியாபாரிகளே குளத்தை தேடிவந்து, மீனைப் பிடிச்சு எடை போட்டு, கிலோ 100 ரூபாய்னு எடுதுக்குறாங்க'' என்ற வைரக்கண்ணு நிறைவுப் பகுதிக்கு வந்தார்.
''விவசாயம், கால்நடைனு ஒண்ணைச் சார்ந்து, ஒண்ணை வெச்சுருக்குறதால... செலவு குறையுது. ஒண்ணோட கழிவு இன்னொண்ணுக்கு உணவாயிடுது. பசுந் தீவனங்கள் இருக்கறதால தீவனச் செலவு குறைஞ்சுடுது. குறிப்பா... வாத்து, முயலுக் கெல்லாம் தீவனச் செலவே இல்லாம வருமானம் மட்டும் வந்துட்டே இருக்குது. இந்த எட்டு ஏக்கர் ஒருங்கிணைந்தப் பண்ணையம் மூலமா வருஷத்துக்கு 13 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்குது'' என்று கண்களில் மகிழ்ச்சி தாண்டவமாட சொன்ன வைரக்கண்ணு,
''கொஞ்சம் மெனக்கெட்டா... கண்டிப்பா நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்கிறதுக்கு நானே நல்ல உதாரணம்தானே'' என்று கேட்டு புன்னகைத்தார்!